பக்கம் எண் :

7

இனிமை அழகினால் இனிமையூட்டுதலை மட்டுங் குறிப்பதாகும். மற்றைய
பண்புகள் பெண்களுக்குப் பொதுவானவை. நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு
என்பவை பெண்களின் இயல்புக்குக் காவலான படைகள். புகழேந்தியாரும்,
‘நாற்குணமும் நாற்படையா' என்று கூறுதலைக் காண்க. பெரும்பான்மையும்
ஒழுக்கங் கூறுதலின் சிறுபான்மையான நோய் பழியில்லாமையும்
கூறப்பட்டது. நோய் பழியிலாமை நோயற்ற வாழ்வுக்காகக் கூறப்பட்டது.
மிருதுபாஷி (வட) - இன்மொழியாள். ரூபவதி - அழகி. இரதி, மதன்
எனப்படுவோர் காமத் தெய்வங்கள். கலையைக் கலைமகளாகவும், திருவைத்
திருமகளாகவும், கொற்றத்தைக் (வெற்றியை) கொற்றவையாகவும் வழிபடுதல்
போலக் காமத்தையும் இரதி, காமன் என வழிபடுதல் நம் நாட்டு வழக்கு.
சிலப்பதிகாரம், சிந்தாமணி போன்ற காவியங்களிற் காமக் கோட்டமும்
அங்குச் சென்று வழிபடுதலும் இருத்தலைக் காண்க.


     (க-து.)
இங்குக் கூறப்பட்டவை கற்புடைய பெண்ணின் பண்புகள்.


          3. நன்மக்கட் பேறு

தங்குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு
     தருமங்கள் செய்து வரலும்,
  தன்மமிகு தானங்கள் செய்தலும், கனயோக
     சாதகன் எனப்படுதலும்,
மங்குதல் இலாததன் தந்தைதாய் குருமொழி
     மறாதுவழி பாடு செயலும்,
  வழிவழி வரும்தமது தேவதா பத்திபுரி
     மார்க்கமும், தீர்க்கா யுளும்,
இங்கித குணங்களும், வித்தையும், புத்தியும்,
     ஈகையும், சன்மார்க் கமும்
  இவையெலாம் உடையவன் புதல்வனாம்; அவனையே
     ஈன்றவன் புண்ய வானாம்;
அங்கச விரோதியே! சோதியே! நீதிசேர்
     அரசன்எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!