பக்கம் எண் :

113

தாழையிலை அத்திஆல் ஏரண்டபத்திரம்
     சகதேவம் முள்மு ருக்குச்
  சாருமிவை அன்றி, வெண் பாலெருக் கிச்சில்இலை
     தனினும்உண் டிடவொ ணாதால்;
தாழ்விலாச் சிற்றுண்டி நீரடிக் கடிபருகல்
     சாதங்கள் பலஅ ருந்தல்
  சற்றுண்டல் மெத்தவூண் இத்தனையும் மெய்ப்பிணி
     தனக்கிடம் எனப்ப ருகிடார்;
ஆழிபுடை சூழுலகில் வேளாளர் குலதிலகன்
     ஆகும்எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே.


     (இ-ள்.)
ஆழிபுடை சூழ்உலகில் வேளாளர் குலதிலகன் ஆகும் -
நாற்புறமும் கடல்சூழ்ந்த உலகில் வேளாளர் மரபிற் சிறப்புற்றவன் ஆகிய,
எமது அருமை ..... தேவனே!, வாழையிலை, புன்னை, புரசுடன்,
நல்குருக்கத்தி, மா, பலா, தெங்கு, பன்னீர் (ஆகிய இலைகளில்) மாசுஇல்
அமுது உண்ணலாம் - குற்றமற்ற உணவை உண்ணலாம், உண்ணாதவோ -
உண்ணத்தகாதனவோ எனில், அரசு, வனசம், செழும்பாடலம், தாழையிலை,
அத்தி, ஆல், ஏரண்ட பத்திரம், சகதேவம் முள்முருக்கு, சாரும் இவை
அன்றி - பொருந்திய இவற்றிலே அன்றி, வெண்பால் எருக்கு இச்சில்
இலைதனிலும் உண்டிட ஒணாதுஆம் - வெண்மையான பாலையுடைய
எருக்கிலை, இச்சில் இலைகளிலும் உண்பது தகாது ஆகும், தாழ்வுஇலாச்
சிற்றுண்டி நீர் அடிக்கடி பருகல், சாதங்கள் பல அருந்தல் - இடைவிடாத
சிற்றுண்டியும் அடிக்கடி நீர் பருகலும் பலவகைச் சோறுண்டலும்,
சற்றுஉண்டல் மெத்தவூண் இத்தனையும் மெய்ப்பிணிதனக்கு இடம்எனப்
பருகிடார் - சிறிதாக உண்பதும் மிகுதியாக உண்பதும் இவ்வளவும்
உடல்நோய்க்கு இடமாகும் என (இம்முறையில்) உண்ணார்.