பக்கம் எண் :

9

           4. உடன் பிறப்பு

கூடப் பிறந்தவர்க் கெய்துதுயர் தமதுதுயர்
     கொள்சுகம் தம்சு கமெனக்
  கொண்டுதாம் தேடுபொருள் அவர்தேடு பொருள்
     அவர்கொள் கோதில்புகழ் தம்பு கழெனத்,
தேடுற்ற அவர்நிந்தை தம்நிந்தை தம்தவம்
     தீதில்அவர் தவமாம் எனச்
  சீவன் ஒன்றுடல்வே றிவர்க்கென்ன, ஐந்தலைச்
     சீறரவம் மணிவாய் தொறும்
கூடுற்ற இரையெடுத் தோருடல் நிறைத்திடும்
     கொள்கைபோல் பிரிவின் றியே
  கூடிவாழ் பவர்தம்மை யேசகோ தரரெனக்
     கூறுவது வேத ருமமாம்;
ஆடிச் சிவந்தசெந் தாமரைப் பாதனே!
     அண்ணல்எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!
          
     (இ-ள்.)
ஆடிச் சிவந்த செந்தாமரைப் பாதனே - நடித்துச் சிவப்பான
செந்தாமரை மலரடிகளையுடையவனே! அண்ணல் - தலைவனாகிய, எமது
............ தேவனே! கூடப் பிறந்தவர்க்கு எய்துதுயர் தமதுதுயர் கொள்சுகம்
தம்சுகம் என - உடன் பிறந்தவர்களுக்கு நேர்ந்த வருத்தம் தமது வருத்தம்
அவர்கள் கொள்ளும் இன்பம் தம் இன்பம் என்றும், தாம் கொண்டு தேடு
பொருள் அவர் தேடு பொருள், அவர்கொள் கோதுஇல்புகழ் தம்புகழ்
என - தாம் முயன்று சேர்க்கும் பொருள் அவர்கள் சேர்க்கும் பொருள்,
அவர்கள் கொண்ட குற்றமற்ற புகழ் தம்முடைய புகழ் என்றும், அவர்
தேடு உற்ற நிந்தை தம் நிந்தை, தம் தவம் தீதுஇல் அவர் தவமாம் என -
அவர்கள் கொண்ட பழிப்பு தம்முடைய பழிப்பு, தம்முடைய தவம் குற்றமற்ற