பக்கம் எண் :

145

சந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாது
     தான்புரிந் திடல்இல் லறம்;
  சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்
     தம்முடன் சரியா யிடார்!
அந்தரி உயிர்க்கெலாந் தாய்தனினும் நல்லவட்
     கன்பனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அந்தரி உயிர்க்கு எலாம் தாய் தனினும் நல்லவட்கு
அன்பனே - பார்வதியும் எவ்வுயிர்க்கும் அன்னையினும் நல்லவளுமான
உமையம்மைக்குக் காதலனே!, அருமை ....... தேவனே!, தந்தைதாய்
சற்குருவை - தந்தை தாயரையும் நல்லாசிரியனையும், இட்ட தெய்வங்களை
- வழிபாடு தெய்வங்களையும், சன்மார்க்கம்உள மனைவியை -
நல்லொழுக்கமுடைய இல்லாளையும், தவறாத சுற்றத்தை - நீங்காத
உறவினரையும், ஏவாத மக்களை - குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகளையும்,
தனைநம்பி வருவோர்களை - தன்னை நம்பிப் புகலடைந்தோர்களையும்,
சிந்தை மகிழ்வு எய்தவே பணிவிடை செய்வோர்களை - மனம் மகிழத்
தொண்டு புரிவோர்களையும், தென்புலத்தோர் வறிஞரை -
தென்புலத்தாரையும் ஏழைகளையும், தீது இலா அதிதியை - குற்றமற்ற
விருந்தினரையும், பரிவு உடைய துணைவரை - அன்புமிக்க
உடன்பிறப்பாளர்களையும், தேனுவை - பசுக்களையும், பூசுரர்தமை -
அந்தணர்களையும், (ஆதரித்தலும்) சந்ததம் செய்கடனை - எப்போதும்
செய்யும் கடமைகளையும், இவை - (ஆகிய) இவற்றை, சந்ததம் பிழையாது
- எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் இல்லறம் - ஒருவன் இயற்றுவது
இல்லறம் எனப்படும், சாரும் நலம் உடையர் ஆம் துறவறத்தோரும் இவர்
தம்முடன் சரிஆயிடார் - பொருந்திய நன்மையையுடையராகிய துறவு
நெறியிலே தவறாது நிற்போரும் இவர்களுடன் ஒப்பாகமாட்டார்.