பக்கம் எண் :

12

         6. நன்மாணாக்கரியல்

வைதாலும் ஓர்கொடுமை செய்தாலு மோசீறி
     மாறாதிகழ்ந் தாலுமோ
  மனதுசற் றாகிலும் கோணாது, நாணாது,
     மாதாபி தாவெனக்குப்
பொய்யாமல் நீ யென்று கனிவொடும் பணிவிடை
     புரிந்து, பொரு ளுடலாவியும்
  புனித! உன்றன தெனத் தத்தஞ்செய் திரவுபகல்
     போற்றி, மல ரடியில் வீழ்ந்து,
மெய்யாக வேபரவி உபதேச மதுபெற
     விரும்புவோர் சற்சீ டராம்
  வினைவேர் அறும்படி அவர்க்கருள்செய் திடுவதே
     மிக்கதே சிகரதுகடன்
ஐயா! புரம்பொடி படச்செய்த செம்மலே!
     அண்ணல்எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஐயா! புரம்பொடிபடச் செய்த செம்மலே - தலைவனே!
முப்புரங்களை நீறுபடச் செய்த பெரியோனே!, அண்ணல் - தலைவனாகிய
எமது ........... தேவனே!, ‘வைதாலும், ஓர் கொடுமை செய்தாலும், மாறாது
சீறி இகழ்ந்தாலும் - திட்டினும் ஏதேனும் கொடுமை யிழைக்கினும், மாறாமற்
சினந்து இழிவுபடுத்தினும், மனது சற்றாகிலும் கோணாது நாணாது - சிறிதும்
மனங்கோணாமலும் வெட்கப்படாமலும், பொய்யாமல் எனக்கு மாதா பிதா
நீயென்று - உண்மையாக எனக்கு அன்னையும் தந்தையும் நீயேயென்று கூறி,
கனிவொடும் பணிவிடை புரிந்து - (ஆசிரியனுக்கு) மனங்கனிந்து வழிபாடு
செய்து, புனித பொருள் உடல் ஆவியும் உன்றனது என - தூயவனே! என்
பொருளும் உடலும் உயிரும் உன்னுடையவை என்று கூறி, தத்தம்