பக்கம் எண் :

32

     (இ-ள்.) நிமலனே - தூயவனே!, ஆயும் அறிவாளர் பணி பாதனே -
ஆராயும் அறிஞர்கள் வணங்கும் திருவடிகளை யுடையவனே!, போதனே -
அறிவின் வடிவே!, அண்ணல் - தலைவனே!, எமது....தேவனே!, காயம் ஒரு
புற்புதம் - உடல் ஒரு நீர்க்குமிழி, வாழ்வு மலைசூழ்தரும் காட்டில்
ஆற்றின் பெருக்குஆம் - வாழ்க்கையோ மலையைச் சுற்றியுள்ள
கானகத்தில் ஓடும் ஆற்றின் வெள்ளம் ஆகும், கருணைதரு புதல்வர்
கிளை மனை மனைவி இவையெலாம் கானல் காட்டும் பிரவாகம் -
அருளுக்கிடமான மக்களும் உறவினரும் வீடும் இல்லாளும் ஆகிய
இவைகளெல்லாம் பேய்த்தேரிலே காணப்படும் வெள்ளம்!, மேய புயபல
வலிமை இளமை அழகு இவையெலாம் வெயில் மஞ்சள் - (நம்மிடம்),
பொருந்திய தோளாற்றலும் இளம் பருவமும் அழகும் ஆகிய இவை மஞ்சள்
வெயில் (இளவெயில்), உயிர்தானுமே வெட்ட வெளியில் வைத்த தீபம் -
உயிரும் திறந்த வெளியில் ஏற்றப்பட்ட விளக்கு, எனவே கருதி - என்றே
நினைத்து, வீண் பொழுது போக்காமல் - வீணே காலத்தைக் கழிக்காமல்,
தெளிந்து - தெளிவடைந்து, உன் பாதத்தில் நேயமுடனே அன்பொடு
நினைவுவைத்து - உன் திருவடிகளிடையே நட்புவைத்து அன்புடன்
நினைத்து, இருபோதினும் நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண்டு
அர்ச்சிக்க அருள் புரிகுவாய் - காலையினும் மாலையினும் நீரையும்
பூவையும் கொண்டு அன்புடன் வழிபட அருள் புரிவாயாக!

     (வி-ரை.)
காட்டாறு விரைவில் வற்றிவிடும், வேனிற் காலத்தில்
நண்பகலில் திறந்தவெளியில் நீர்ப்பெருக்கென்று நினைக்குமாறு
தோன்றுவதே கானல் அல்லது பேய்த்தேர் எனப்படும். இது
பொய்த்தோற்றம். புதல்வரும் உறவினரும் மனைவியும் உயர்திணையாயினும்
மனையுடன் சேர்த்து எண்ணப்பட்டதனால் நிலையாமை (யிழிவு) கருதி
அஃறிணையாகக் கூறப்பட்டன. இது திணைவழுவமைதி. காலையிலும்
மாலையிலும் உண்டாகும் இளவெயிலை மஞ்சள் வெயிலென்பது வழக்கம்.
நிலையாமை கருதி இவை உவமையாயின.

     (க-து.)
நிலையற்ற வாழ்க்கையில் உறுதி வேண்டின் இறைவனை
வழிபடல்வேண்டும்.