(இ-ள்.)
அறிவுற்ற
பேரைவிட்டு அகலாத மூர்த்தியே -
அறிவுடையோரைப் பிரிந்து செல்லாத தலைவனே!, ஐயனே - முதல்வனே!,
அருமை...........தேவனே!, தறிபட்ட சந்தனக்கட்டை பழுதாயினும் சார்
மணம் பழுது ஆகுமோ - வெட்டப்பட்ட சந்தனக்கட்டை குறைபட்டாலும்
அதனிடம் உள்ள நறுமணம் குறையுமோ?, தக்க பால் சுவறிடக்
காய்ச்சினும் அதுகொண்டு சார்மதுரம் குறையுமோ - நல்ல பால் வற்றிடக்
காய்ச்சினாலும் அதனாலேயே அதனிடம் உள்ள சாரமான இனிமை
வற்றுமோ?, நிறைபட்ட கதிர்மணி அழுக்கு அடைந்தாலும் அதின்
நீள்குணம் மழுங்கிவிடுமோ - நிறைந்த பேரொளியை உடைய மணி
அழுக்குப்பட்டாலும் அம் மணியின் உயர்ந்த ஒளிப்பண்பு
குறைந்துவிடுமோ?, நெருப்பிடை உருக்கினும் அடிக்கினும் தங்கத்தின்
நிறையும் மாற்றுக் குறையுமோ - பொன்னை நெருப்பிலே உருக்கினாலும்
(தகடாக) அடித்தாலும் அதனிடம் நிறைந்த மாற்றுக் குறைந்துவிடுமோ?,
கறை பட்ட பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு கதிர்மதி கனம்
போகுமோ - கருமைபொருந்திய கார்முகிலானது ஞாயிற்றையும்
திங்களையும் மறைத்தாலும் அக்காரணத்தால் அவற்றின் பெருமை
கெடுமோ?, கற்ற பெரியோர் மகிமை அற்பர் அறிகிலரேனும் காசினிதனில்
போகுமோ - படித்த பெரியோரின் மேன்மையை அறிவிலார்
அறியாவிட்டாலும் அதனால் உலகிலே அவர் பெருமை நீங்குமோ?
(வி-ரை.)
பசுமை
+ புயல் - பைம்புயல். பசுமை இங்குக்
கருமையையே உணர்த்தும், பசுமை நிறமுடைய முகிலே இல்லாமையால்.
இறைவன் வடிவம் அறிவே ஆகையால் அவர், ‘அறிவுற்ற பேரைவிட்டு
அகலாத மூர்த்தி' ஆனார். கதிர் - ஞாயிறு, மதி - திங்கள்.
(க-து.)
சான்றோர்
பெருமை அற்பரால் அழிவுறாது.