பக்கம் எண் :

104குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

பொழியும் பொழிற்றைகூ டலிற்பொலிவாய்
   புதுநீ ராடி யருளுகவே
பொருநைத் துறைவன் பொற்பாவாய்
   புதுநீ ராடி யருளுகவே.    
(7)

91.
மறிக்குந் திரைத்தண் புனல்வைகை
   வண்ட லிடுமண் கூடைகட்டி
வாரிச் சுமந்தோ ரம்மைதுணை
   மணிப்பொற் குடத்திற் கரைத்தூற்றும்

வெறிக்குங் குமச்சே றெக்கரிடும்
   விரைப்பூந் துறைமண் பெறினொருத்தி
வெண்பிட் டிடவு மடித்தொருவன்
   வேலை கொளவும் வேண்டுமெனக்

குறிக்கு மிடத்திற் றடந்தூநீர்
   குடையப் பெறினக் கங்கைதிருக்
கோடீ ரத்திக் குடியிருப்பும்
   கூடா போலும் பொலன்குவட்டுப்

பொறிக்குஞ் சுறவக் கொடியுயர்த்தாய்
   புதுநீ ராடி யருளுகவே
பொருநைத் துறைவன் பொற்பாவாய்
   புதுநீ ராடி யருளுகவே.    
(8)

    91. (1-3) அம்பிகை நீராடுங்கால் அவள் நகிலிலுள்ள குங்கும்க் குழம்பு கரைந்து கரையிற் படிதலால் அந்த வண்டல் மண்ணைச் சுமப்பதற்குச் சிவபெருமான் விரும்புவாரென்பதும், அடிக்கடி அம்பிகை நீராடின் சிவபெருமான் அடுத்தடுத்துச் சுமக்க நேருமென்பதும், அதனால் கங்கைக்கு வருத்தமுண்டாமாதலின் அவர் திருமுடிமேல் இருத்தலை அவள் விரும்பாளென்பதும் இங்கே கூறப்படும் கருத்துக்கள்.

    (1) சுமந்தோர் - சோமசுந்தரக் கடவுள்; எழுவாய்.(பி-ம்.) ‘வாரிச் சுமந்தோர்க்கம்மை’. குடம் - நகில்.

    (2) வெறி - நறுமணம். (பி-ம்.) ‘எக்கலிடும்’; ‘போலொருத்தி’. ஒருத்தி - செம்மனச்செல்வி யென்னும் பிட்டு வாணிச்சி. ஒருவன் - அரிமர்த்தன பாண்டியன். வேலை கொள்ளுதல் - உடைப்பை அடைக்க ஏவுதல். பெறின் வேண்டுமென இயைக்க.

    (2-3) என குறிக்கும் இடம் - என்று (சிவபெருமான்) கருதும் இடம். (பி-ம்.) ‘குறிக்கு மிடத்தித் தடநதிநீர்’. கோடீரம் - சடை. பொலன்குவடு - மேருமலை.

    (4) (பி-ம்.) ‘சுறவுக் கொடி’.