பக்கம் எண் :

118குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

2.
அரும்பிட்டுப் பச்சிலையிட் டாட்செய்யு மன்னையவள்       
தரும்பிட்டுப் பிட்டுண்டாய் தலையன்பிற் கட்டுண்டே       

3.
முலைகொண்டு குழைத்திட்ட மொய்வளைகை வளையன்றே  
மலைகொண்ட புயத்தென்னீ வளைகொண்டு சுமந்ததே.  

4.
ஊன்வலையி லகப்பட்டார்க் குட்படாய் நின்புயத்தோர்   
மீன்வலைகொண் டதுமொருத்தி விழிவலையிற் பட்டன்றே.   

அம்போதரங்கம்
போகமாய் விளைந்தோய்நீ, புவனமாய்ப் பொலிந்தோய்நீ    
ஏகமா நிருந்தோய் நீ,     எண்ணிறந்து நின்றோய் நீ,    
வானு நீ,     நிலனு நீ,     மதியு நீ,     கதிரு நீ,    
ஊனு நீ,     உயிரு நீ,     உளது நீ,     இலது நீ.    


எனவாங்கு,

    2. அரும்பை இட்டு: “மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார்” (திருவா.) பச்சிலையிட்டு: “நொச்சியாயானுங் கரந்தை யாயினும், பச்சிலை யிட்டுப் பரவுந் தொண்டர்” (திருவிடைமும். 19 : 9-10); “போதும் பெறாவிடிற் பச்சிலையுண்டு” (திருக்கழுமலமும். 12) அன்னை - செம்மனச் செல்வியென்னும் பிட்டு வாணிச்சி. பிட்டுப் பிட்டு உண்டாய் - பிட்டென்னும் சிற்றுண்டியை விண்டு உண்டாய். தலையன்பு - அவளது சிறந்த அன்பு.

    3. மொய் வளை - உமாதேவியாரது. அன்றே - அல்லவே. அங்ஙனம் இருப்பவும், நீ வளை சுமந்தது ஏன்? மதுரையில் சோமசுந்தரக் கடவுள் வளையல் விற்ற திருவிளையாடலைக் குறித்தபடி.

    4. ஊன்வலை - உடம்பாகிய வலை; ஊனை ஆகுபெயராக்கிப் பிறவியென்று பொருளுரைத்தலும் பொருந்தும். நின் புயத்து ஓர். ஒருத்தி - உமாதேவியார். அம்பிகை ஒரு வலைஞன் திருமகளாக வளர்ந்தமையின் அவகை மணம் செய்துகொள்ள வலைஞராயினார். இவ்வரலாறு வலை வீசின படலத்தால் அறியப்படும்.

    (அம்போதரங்கம்.) கதிர் - சூரியன். ஊன் -உடல்.

    எனவாங்கன்றது தனிச்சொல். என -என்று. ஆங்கு; அசை நிலை.