பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்173

   *பதினான்குசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
203.
தேன்வ ழங்குக டுக்கை யார்கரு
   மான்வ ழங்குமு டுக்கையார்
திருவி ருந்தவி டத்தி னார்ருள்
   கருவி ருந்தந டத்தினார்
மான டங்கிய வங்கை யார்சடைக்
   கான டங்கிய கங்கையார்
வைகை யொன்றிய கூட லாரிவள்
   செய்கை யொன்றையு நாடலார்
கான வேயிசை கொல்லு மாலுற
   வான வாய்வசை சொல்லுமால்
கன்றி யன்றிலி ரங்கு மாலுயிர்
   தின்று தென்றனெ ருங்குமால்
தீநி லாவனல் சிந்து மாற்கொல
   வேனி லான்மெல முந்துமால்
தினமி டைந்திடை நொந்த போன்மகண்
   மனமு டைந்தது ணர்ந்துமே.    
(100)

தலைவி கூற்று. யாரேனும் தலைவரிடம் தூது போதல் வேண்டுமென்று புலப்படுத்துகின்றாள்.

    சலராசி தங்கு கணை - பாற்கடலில் தங்கும் திருமாலாகிய அம்பு. மொய்ம்பர் - வலியையுடையவர். சரணார விந்தமிசையே மலராகிடு அந்த நயனாரவிந்தர் - திருவடியின்கண் மலராக அமைந்த அந்தத் திருமாலின் விழியையுடையவர். (பி-ம்.) ‘நயனாரவிந்த மதுரேசர்’. திரிவார்களாகிய சிலர். ஓர் அங்கியென்றது சந்திரனை (189); “வீங்கா நின்ற கருநெருப்பினிடையே யெழுந்த வெண்ணெருப்பே” (கம்ப. மிதிலைக். 76.)

    203. (பி-ம்.) *சந்தத் தாழிசை.

    தோழிகூற்று; செவிலி கூற்றுமாம்.

    கடுக்கையர் - கொன்றைமாலையை அணிந்தவர். கருமான் - யானை. உடுக்கை - உடை; இங்கே போர்வை. திரு - உமாதேவியார்; “அறந்தந்த பொன்”, “மின்னுழை மருங்குற் பொன்” (120, 206) என்றும் கூறுதல் காண்க. இடத்தினார் - இடப்பாகத்தை உடையவர். நடம் - சொக்கத் தாண்டவம். சிவபெருமான் ஆன்மாக்களை உய்யக்கொள்ளும் பொருட்டுப் பஞ்ச கிருத்திய நடனம் புரிதலின், அருள் கருவிருந்த நடத்தினாரென்றாள். மான் - மான்கன்று. சடைக்கான் - சடையாகிய காட்டில். கூடலார் - மதுரையை யுடையவர். இவளென்றது தலைவியை. கானவேயின் இசை; வேய் - வேய்ங்குழல். உறவான ஆய் - அன்புடைய நற்றாய்; உறவான வாயெனப் பிரித்து, நட்புடையோர் வாய்களென்று பொருள் கொள்ளுதலும்