பக்கம் எண் :

186குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

225.
பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர்
சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்குந் தாழ்ச்சி சொலல்.    
(19)

226.
கற்றுப் பிறர்க்குரைத்துத் தாம்நில்லார் வாய்ப்படூஉம்  
வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை - சொற்றநீர்  
நில்லாத தென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன்  
சொல்லாமே சூழ்ந்து சொலல்.    
(20)

227.
பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார்
தமக்குப் பயன்வே றுடையார் திறப்படூஉம்
தீவினை யஞ்சா விறல்கொண்டு தென்புலத்தார்
கோவினை வேலை கொளல்.    
(21)

    225. பெருஞ்சூட்டு - பெருமதிப்பு. யாண்டும் - எவ்விடத்தும் எக்காலத்தும். (பி-ம்.) ‘மறவாமை’. நோற்பது - நோற்றல்; உளங்கொண்டு அயர்வின்றிச் செய்யத் தகுவதாதலாலும் விளையும் பயன் பெரிதாதலாலும் இச்செயலை நோற்றலென்றார். தூற்றி - பலர் அறியச் சொல்லி. புறங்காத்து - தாம் அறிந்திருந்தாலும் அவற்றை வெளியிடாமல் அடக்கி. தாழ்ச்சி - வணக்கத்தைப் புலப்படுத்தும் சொற்களை; “வணங்கிய வாயினர்” (குறள், 419.)

    நோற்பது ஒன்று உண்டு; அது தாழ்ச்சி சொல்ல் என்க.

    இது மக்களாகப் பிறந்தார் யாவருக்கும் கூறிய அறிவுரை.

    226. தாம் நில்லார் - கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக என்றபடி நில்லாதவர். வெற்றுரை - பயனற்ற சொல். என் - என்ன காரணம்? நாண் உறைப்ப - நாணம் மிகும்படி. நேர்ந்து - எதிர்ப்பட்டு. சூழ்ந்து - ஆராய்ந்து. ஆராய்தலாவது தன்னைக் கடிந்து கூறுவான் அங்கே இல்லாதிருத்தலை ஆராய்ந்தறிதல்.

    வலியுடைமையாவது சூழ்ந்து சொல்லலென்க.

    கற்றபடி நிற்றல் வேண்டுமென்பது கருத்து.

    227. பிறர்க்குப் பயன்பட - தமக்கும் பிறர்க்கும் பயன்படுவதை எண்ணாமற் பிறர்க்கே பயன்படும்படி. கற்றவற்றை விற்பார். பயனைப் பின் இரண்டடிகளிற் கூறுவார். தீவினை அஞ்சா விறல் - தீவினையை அஞ்சாத வீரம்; விறலென்றது இகழ்ச்சிக் குறிப்பு. தென்புலத்தார் கோ - யமன். அவனை வேலை கொளலாவது அவன் பலவகையான தண்டனையைப் பலமுறை செய்யும்படி செய்வித்தல். யமதண்டத்தை அடைவதே அவர் பெறும் பயனென்றபடி.

    “கற்பார் பொருள்காணார் காசுபணங் காணிலுனை, விற்பாரவர் பானீ மேவாதே” (தமிழ்விடு, 184) என்பதிலும் விற்றலின் இழிவு புலப்படுத்தப்படுகின்றது.