பக்கம் எண் :

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்263

மழலை வண்டுதட மலர்கு டைந்துபுது
   மதுவ ருந்திநறு மல்லிகைச் சேக்கையின்
வடிப சுந்தமிழி னிசைப யின்றபெடை
   யொடுது யின்றினிய செவ்வழிப் பாட்டினை
வருவி பஞ்சிபயி றரும தங்கர்தெரு
   மரமு ரன்றுநெடு வைகறைப் போய்ச்செழு
மலரி லஞ்சிதொறு முலவு கந்தபுரி
   மருவு கந்தனையெ மையனைக் காக்கவே.     
(4)


வேறு
353.
கடாமுமிழ் கைக்கதக் கிம்புரிக் கோட்டொரு
   கராசல மிட்டமெய்க் கஞ்சுகிக் கேற்பவொர்
படாமணி மத்தகத் தந்தியைத் தீர்த்தர்கள்
   பராவரு கற்பகக் கன்றினைப் போற்றுதும்
வடாதுபொ ருப்பினிற் றுன்றுபுத் தேட்கெதிர
   மனோலய முற்றமெய்ப் பண்பினைக் காட்டிய
சடானன னைத்தலைச் சங்கம்வைத் தாற்றிய
   சடாயுபு ரத்தருட் கந்தனைக் காக்கவே.    
(5)

    (4) தமிழினிசை பயின்ற வெடை : “வண்டு தமிழ்ப்பாட்டிசைக்குந் தாமரையே” (கம்ப. பம்பைப். 29.) செவ்வழி - மாலைக் காலத்துக்குரிய பண். விபஞ்சி - விணை. மதங்கர் - பாணர். இலஞ்சி - குளம்.

    (முடிபு.) எம் ஐயனைக் காக்கத் தையலைப் போற்றுதும்.

    353. (சந்தக் குழிப்பு.) தனாதன தத்தனத் தந்தனத் தாத்தன. (அடி, 1) யானைப் போர்வையை அணிந்த சிவபெருமானுக்கு ஒப்ப. கை -துதிக்கை. கிம்புரி - யானை தந்தத்திற்கு இடும் பூண். கராசலம் - யானை. கஞ்சுகி - சட்டையை அணிந்த சிவபெருமான்; கஞ்சுகம் - சட்டை. (பி-ம்.) ‘கஞ்சுகக் கேற்ப’.

    (2) படாம் - முகபடாத்தை; முகபடாத்திற்கு யானைத் தோல் உவமை. கற்பகக் கன்று - கற்பக விநாயகர்; இத்தல விநாயகர்.

    (3) வடாது பொருப்பு - மேருமலை புத்தேட்கு எதிர் - தேவர்களுக்கு எதிரே; புத்தேள் : சாதியொருமை. மெய்ப்பண்பினை - தமது உண்மை இயல்பினை; இச்சரித்ததின் விரிவைக் கந்தபுராணம், திருவிளையாட்டுப் படலத்தாலுணர்க.

    (4) தலைச்சங்கம் இங்கே இருந்ததாகக் கூறப்படுவதுண்டு. சடாயுபுரம் : இத்தலத்தின் திருநாமம்.

    (முடிபு.) கந்தனைக் காக்கக் கற்பகக்கன்றினைப் போற்றுதும்.