பக்கம் எண் :

304குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

406.
வள்ளைக் குழையிற் றாவடிபோம்
    மடமா னோக்கிற் கடைசியர்கண்
மாலைக் குழல்வண் டோலமிட
    மடுவில் வெடிபோம் வரிவாளை
பள்ளத் திருடூங் கழுவநீர்ப்
    பரப்பென் றகல்வான் மிசைத்தாவப்
பாகீ ரதித்தீம் புனல்கிடைத்த
    பரிசு வீட்டின் பயன்றுய்க்கும்
உள்ளக் கருத்தாற் பிறிதொன்றை
    உண்மைப் பொருளென் றுள்ளவுந்தம்
உணர்விற் றெய்வங் கடைக்கூட்ட
    உறுதி கிடைத்த படிபோலும்
அள்ளற் பழனப் புள்ளூருக்
    கரசே வருக வருகவே
அருளா னந்தக் கடற்பிறந்த
    அமுதே வருக வருகவே.    
(7)

    406. (அடி, 1) வள்ளைக்குழை - வள்ளைக் கொடியைப் போன்ற காது. தாவடி போதல் - தாவிச் செல்லுதல்; “தாவடி வந்திப்படியென தாவி தளர்வித்ததே” (புகலூரந்தாதி); “தாவடியோட்டு மயிலிலும்” (கந்தரலங்காரம்.) வெடிபோம் - துள்ளிச் செல்கின்ற.

    (2) அழுவம் நீர்ப்பரப்பு - கடற்பரப்பு. பாகீரதி - ஆகாய கங்கை. பரிசு - இயல்பு; எழுவாய்.
    (3) பிறிது ஒன்றை - உண்மைப் பொருளல்லாத ஒன்றை. உணர்வில் - அறிவில். உறுதி - வீடு.

    (1-3) கடைசியரது கூந்தலில் ஒலிக்கும் வண்டின் ஒலிக்கு அஞ்சிய வாளைமீன் ஆகாயத்தைக் கடலென மயங்கி அதனிடத்தே தாவ, அது தான் நினையாமலே ஆகாய கங்கையில் வீழ்ந்து மகிழ்ந்தது; இந் நிகழ்ச்சி பிறிதொரு தெய்வத்தை மெய்யாக் கொண்டு அன்பு செய்பவர்களுக்கும் இறைவன் நல்லருள் செய்ய உறுதிப் பயன் கிடைத்தது போன்றது.

    (4) அள்ளல் - சேறு.