| அல்கா நல்குர வவாவெனப் படுமே | | ஐயுணர் வடக்கிய மெய்யுணர் வல்லதை | | உவாக்கடல் சிறுக வுலகெலாம் விழுங்கும் | | அவாக்கடல் கடத்தற் கரும்புணை யின்றே, அதனால் | 25 | இருபிறப் பியைந்த வொருபிறப் பெய்தும் | | நான்மறை முனிவர் மூவா யிரவரும் | | ஆகுதி வழங்கும் யாக சாலையிற் | | றூஉ நறும்புகை வானுற வெழுவ | | தெழுநாப் படைத்த முத்தீக் கடவுள் | 30 | கடலமிழ் துமிழ்ந்தாங் கவியமிழ் துண்ண | | வரும்பெருந் தேவரை வானவர் கோனொடும் | | விருந்தெதிர் கொள்கென விடுத்தது கடுக்கும் |
(21) அல்கா நல்குரவு - குறையாத வறுமை. அவாவின்மை, “வேண்டாமை யன்ன விழுச்செல்வம்” (குறள், 363) எனச் செல்வமாகப் பாராட்டப்படுதலின், அவாவே வறுமையாகும்; “நல்குர வென்னு நசை” (குறள், 1043.)
(22) ஐயுணர்வு அடக்கிய - செல்லப்படுகின்ற புலன்களின் வேறுபாட்டால் ஐந்தாகிய அறிவை ஒடுக்கிய. மெய்யுணர்வு - உண்மை ஞானம்; “ஐயுணர் வெய்தியக் கண்ணுன் பயமின்றே, மெய்யுணர்வில்லாதவர்க்கு” (குறள், 354) என்பதில் இவ்விரண்டும் வந்தன.
(23) உவாக்கடல் - பௌர்ணமியிற் பொங்கும் கடல்.
(24) அவாவாகிய கடலை. புணை - தெப்பம்.
(25-33) தில்லையில் அந்தணர் மூவாயிரவர் புரியும் வேள்விச் சிறப்புக் கூறப்படும்.
அவர்கள் செய்யும் யாகத்தில் எழும் புகையானது அக்கினி தேவன் அவியுண்ணவரும் தேவர்களை எதிர்கொள்ள விடுத்தது போல விளங்குமென்பர்.
(25-6) இருபிறப்பு - உபநயனத்திற்கு முன் ஒருபிறப்பும் அதன் பின்னராகிய ஒரு பிறப்பும் (472:14); “இருப்பிறப்பாளர்” (முருகு. 182); “ஒன்றுபுரிந் தடங்கிய விருபிறப் பாளர்” (புறநா. 367:12.)
(28) எழுவது - எழுதலை.
(29) அக்கினிக்கு எழு நா உண்டென்பர்; ‘அக்கினி தேவனுக்கு நாக்கு ஏழென்பது வேதம்’ (தக்க. 475, உரை). முத்தீ - ஆகவனீயம். தக்ஷிணாக்கினி, காருகபத்தியம்.
(30) கடல் அமிழ்து உமிழ்ந்து - தாம் முன்பு உண்ட பாற்கடல் அமுதத்தை உமிழ்ந்துவிட்டு. ஆங்கு: அசைநிலை. அவி - யாகத்தில் தேவர் பெறும் உணவு.
|