இது நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி ஒருவிகற்பமாய் நடத்தலின் ஒரு விகற்பத்து இன்னிசை வெண்பா. இஃது அடிதோறும் முதலெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் அடிமோனை. இதனுள் அடிதோறும் ஈற்றுச்சீர் முரணத் தொடுத்தமையாற் கடைமுரணுமாம்.
488. குமைந்த - அடக்கிய, கும்பிட்டென்றது தரிசனத்தைக் குறிப்பித்தபடி. தோற்றம் - பிறவி. துடைத்தல் - முற்றும் இல்லையாக்குதல், ஏற்றினான் - இடபவாகனத்துயுடையார், போற்றினால் நல்கும் பொருள் இனி என்? பிறவி தீர்தலாகிய பேற்றினும் பிற பேறில்லை யென்றபடி.
489. நமரங்காள்; “இருளிலியல் பெய்தாத தென்னோ நமரங்காள் (வளையாபதி) இச்செய்யுள் நீதிநெறி விளக்கத்தின் காப்புச்செய்யுளாகவும் அமைந்துள்ளது.
எம்பிரானது மன்றை வழுத்தாதது என் என்க.
490. கண்களென்றது கண்டார் கண்கள் அனைத்தையும்; கண்ட பெருமை யுடைமையின் மலர்க்கண்களென்று சிறப்பித்தார்; தம் கண்களையும் உளப்படுத்திக் கூறியவாறு. வார் செவிகள் - நீண்ட காதுகள். முடிச் சென்னி - முடியையுடைய தலை; முடி - மயிர்முடி. வாழி ....வாய்: “வாழி யெம மனனு மணிநாவும்மே” (206)