பக்கம் எண் :

384குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

499.
பொன்புரிந்த செஞ்சடைக்கு வெள்ளிப் புரிபுரிக்கும்
வெண்டிங்கட் கண்ணியான் வெல்கொடியு மானேறே
அங்கவன்ற னூர்தியுமற் றவ்வேறே யவ்வேற்றின்
கண்டத்திற் கட்டுங் கதிர்மணிக்கிங் கென்கொலோ
பைந்தொடியார் செய்த பகை.

    இது பலவிகற்பத்து ஐந்தடிப் பஃறொடை வெண்பா. இதன் முதலடி முதற்சீரும் முரணத் தொடுத்தமையால் பொழிப்புமுரண். நான்காமடி இறுதிச்சீரொழிந்து ஏன் முச்சீரும் முதலெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் கூழைமோனை. இஃது அடிதோறும் இரண்டாமெழுத்து மெல்லினம் வரத் தொடுத்தமையால் இனவெதுகை.        
(19)

500.
கருந்தாது கொல்லுங் கருங்கைத்திண் கொல்லர்    
வருந்தா தியன்றதொரு வல்விலங்கு பூண்டு    
திருந்தாதார் முன்றிறொறுஞ் சென்றுசிலர் தூங்க    
இருந்தேங் களிதூங்கி யாமேமற் றம்ம    
அருந்தா தலர்தில்லை யம்பலத்திற் றூங்கும்    
பெருந்தேன் முகந்துண்ணப் பெற்று.    

    இஃது ஒருவிகற்பத்து ஆறடிப் பஃறொடை வெண்பா.    
(20)


    499. பொன்புரிந்த - பொன் விரும்பிய. வெள்ளிப்புரி - வெள்ளி இழை. புரிக்கும் - இழைக்கும். புரிபுரிக்கும்; 434. ஊர்தி - வாகனம். கண்டம் - கழுத்து. கொடியும் ...... அவ்வேறே: “ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த, சீர்கெழு கொடியு மவ்வே றென்ப” (புறநா. 1:3-4.) விடைமணி யோசை இரவிலே தனித்த மகளிர்க்குத் துன்பத்தைச் செய்யுமென்பதைக் குறுந்தொகை, 190-ஆம் செய்யுளின் உரை முதலியவற்றால் அறியலாகும். எம்மால் விரும்பப்பெறும் சிவபெருமானுக்குக் கொடியாகவும் ஊர்தியாகவுமுள்ள ஆனேற்றின் மணி எமக்கு இன்பந் தராமல் துன்பத்தைத் தருதல் முரண்பாடுடைய தென்றாள்.

    500. கருந்தாது கொல்லும் - இரும்பைத் தொழிற்படுத்தும்; ‘மரங் கொஃறச்சன்’ (புறநா. 206:11) என்பதுபோல நின்றது. கருங்கை - வலிய கை. வல்விலங்கு - வலிய கால்தளை. திருந்தாதார் - பகைவர். தூங்க - தம் செயலொடுங்கி நிற்ப. அருந்தாது அலர் - அரிய பொன் விளங்குகின்ற. தூங்கும் பெருந்தேன் - தங்கியுள்ள பெரிய தேனடையை; என்றது நடராசப் பெருமானை. தூங்கும் பெருந்தேன்: “பெருந்தேன் கண்படு வரை”, “பிரசந்தூங்கு மலை” (குறுந். 273: 5, 392:8)