பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை391

514.
(1) அம்பேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே
   கொம்பே றுடையான் கழலிறைஞ்சா தென் கொலியாம்
   வம்பே யிறந்து விடல்.

(2) வாணேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே
    நீணாகம் பூண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
    வீணே யிறந்து விடல்.

(3) கோளாருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே
    ஆளாக வாண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
    வாளா விறந்து விடல்.

    இது சிந்தியல்வெண்பா ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்த வெள்ளொத்தாழிசை. இதில் ஆளாக வாண்டானென முதலிரு சீரும் முரணத் தொடுத்தமையால் இணைமுரண்.    
(34)

515.
பரசிருக்குந் தமிழ்மூவர் பாட்டிருக்குந் திருமன்றிற்
பரசொன் றேந்தி
அரசிருக்கும் பெருமானார்க் காட்செய்யா ரென்செய்வார்
முரசிருக்கும் படைநமனார் முன்னாகு மந்நாளே.

    இது முதலடி அறுசீராய் ஏனையடி நாற்சீராய் வந்த மூன்றடி வெண்டுறை.
(35)


    514. (1) அம்பு ஏர் - அம்பையொத்த. உண்கண்ணார்க்கு - மையுண்ட கண்களை உடைய மகளிர்பொருட்டு. அழிந்த - அழிவுற்ற. கொம்பு ஏறு உடையான் - கொன்றையுடைய இடபவாகனத்தை உடையவன். வம்பே - வீணே; யாதொரு பயனுமின்றி. இறந்துவிடல் என் என்க.

    (3) கோள் - கொலைத் தன்மை. ஆளாக - என்னை அடிமையாகக் கொண்டு.

    கழலிறைஞ்சாவிடின் யாதொரு பயனுமின்றி இறந்துவிடல் துணிபாதலின் இங்ஙனம் கூறினர். யாமென்றது ஏனையோரையும் உளப்படுத்தி.

    515. பரசிருக்குந் தமிழ் - தேவாரம்; பரசு - பராவுதல். மூவர் - திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார். பரசு - மழு அரசிருக்கும் பெருமான் - நடராசப் பெருமான் நமனார் முன்னாகும் - யமனுக்கு முன்னே நிற்கும். சிவபெருமானுக்கு ஆட்படாதார் யம பயத்தினின்றும் எங்ஙனம் நீங்குரென்றபடி. நமனார்: பன்மை இகழ்ச்சிக் குறிப்பு (465).