பக்கம் எண் :

392குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

516.
படர்தரும்வெவ் வினைத்தொடர்பாற் பவத்தொடர்பப்
   பவத்தொடர்பாற் படரா நிற்கும்
விடலரும்வெவ் வினைத்தொடர்பவ் வினைத்தொடர்புக்
   கொழிபுண்டே வினையேற் கம்மா
இடர்பெரிது முடையேன்மற் றென்செய்கே னென்செய்கேன்
   அடலரவ மரைக்கசைத்த வடிகளோ வடிகளோ.

    இது முதலடியிரண்டும் அறுசீராய் ஏனையடி நாற்சீராய் வந்த நான்கடி வெண்டுறை.    
(36)

517.
கூற்றிருக்கு மடலாழிக் குரிசின்முத லோரிறைஞ்சக்
   கொழுந்தேன் பில்கி
ஊற்றிருக்குந் தில்லைவனத் தசும்பிருக்கும்
பசும்பொன்மன்றத் தொருதா ளூன்றி
வண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைத்
துண்டமா டப்புலித் தோலுமா டப்பகி
ரண்டமா டக்குலைந் தகிலமா டக்கருங்
கொண்டலோ டுங்குழற் கோதையோ டுங்கறைக்
கண்டனா டுந்திறங் காண்மினோ காண்மினோ.

    இது முதலடியிரண்டும் அறுசீராய் ஓரோசைத்தாய் ஏனையடி நாற்சீராய் வேறோரோசைத்தாய் வந்தமையால் ஏழடி வேற்றொலி வெண்டுறை.        
(37)


    516. பவத்தொடர்பு - பிறவியின் சம்பந்தம். வினையும் பிறவியும் ஒன்றுக் கொன்று காரணகாரியமாகத் தொடர்ந்து நிற்கும். ஒழிபு உண்டே; இல்லையென்றபடி; ‘காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரை யின்றி வருதலின் பிறவிப் பெருங்கடலென்றார்’ (குறள், 10 பரிமேல்.) என்பது இங்கே நினைத்தற்குரியது. அடல் அரவம் - கொல்லுதலைச் செய்யும் பாம்பினை. அரைக்கு அசைத்த - இடையிலே கச்சாகக் கட்டிய; அரைக்கு: உருபு மயக்கம். அடிகேள்: விளி.

    517. கூற்றின் தன்மை தங்கியிருக்கும் வலியையுடைய சக்கரப் படையை ஏந்திய குரிசில்; திருமால். அசும்பு இருக்கும் பசும்பொன் மன்றம் - தன்னில் தோன்றிய ஒளி துளிப்பது போன்ற தோற்றத்தோடு இருக்கும் பசிய பொன்னாலாகிய சிற்றம்பலம். கொண்டல் ஓடும் குழல் - மேகம் ஓடுதற்குக் காரணமான கூந்தல். கோதை: சிவகாமி யம்மை.