பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை393

518.
உருவல னருவல னொருவன்மற் றிருவருக்
கரியவ னெனவுணர்ந் தறைகுந ரறைகமற்
பரவைதன் மனைவயிற் பாவல னேவலின்
இருமுறை திரிதலி னெளியனென் றெளியனும்
பரவுவன் மன்றம் பணிந்து.

    இதுவும் ஈற்றடி ஒருசீர் குறைந்து வந்தமையால் ஓரொலி வெண்டுறை. இதன் முதலடி நாற்சீரும் முரணத் தொடுத்தமையால் முற்று முரண். அதுவே நாற்சீரும் இரண்டாமெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் முற்றெதுகையுமாம்.    
(38)

519.
அங்கட் கமலத் தலர்கமல மேயீரு நீரேபோலும்
வெங்கட் சுடிகை விடவரவின் மேயீரு நீரேபோலும்
திங்கட் சடையீருந் தில்லைவனத் துள்ளீரு நீரேபோலும்.

    இஃது அடிதோறும் தனிச்சொற் பெற்று மூன்றடியால் வந்தமையால்மூன்றடி வெளிவிருத்தம்.    
(39)

520.
வெஞ்சம னஞ்ச வேலொ டெதிர்ந்தா னமரங்காள்     
அஞ்ச லெனுஞ்சொல் லார்சொல வல்லார் நமரங்காள்     
மஞ்சிவ ரிஞ்சி மன்ற மிறைஞ்சீர் நமரங்காள்     
நஞ்சமயின்றார் நல்குவர் மாதோ நமரங்காள்.     

    இது நான்கடியாய் அடிதோறும் தனி சொற் பெற்று வந்தமையால் நான்கடிவெளிவிருத்தம்.
(40)


    518. இருவருக்கு - பிரமதேவருக்கும் திருமாலுக்கும். பாவலன் - சுந்தரமூர்த்தி நாயனார். அகங்கரித்தாருக்கு அரியராகி அடியாருக்கு எளியராக இருப்பா ரென்றபடி; “காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற வெளியன் கண்டாய்” (தே. திருநா.) இருமுறை தூது சென்றது: 478.

    519. சிவபெருமானே மும்மூர்த்திகளாகவும் உள்ளாரென்பது கூறப்படும்.

    அம் கண் கமலத்து அலர் கமலம் மேயீரும் - அழகிய இடத்தையுடைய நீரில் மலர்கின்ற தாமரை மலரில் விரும்பியுறைகின்ற பிரம தேவரும். மேயீர்: முன்னிலை. சுடிகை - உச்சி. அரவு - ஆதிசேடன்.

    520. சமன் - யமன். அஞ்ச - நாம் அஞ்சும்படி. வேல் - இங்கே, யமனது சூலம். எதிர்ந்தான் - வந்தான்; துணிவுபற்றி இறந்த காலத்தாற் கூறினார். அஞ்சல் - யமனுக்குப் பயப்படுதலை யொழிக மஞ்சு இவர் இஞ்சி - மேகங்கள் ஏறித் தவழ்கின்ற திருமதிலையுடைய; நஞ்சம் அயின்றாரென்றது தேவர் அஞ்சும்படி வந்த ஆலகாலவிடத்தையுண்டு அவரை மரண பயத்தினின்றும் நீக்கியருளியவராதலின், நம்மையும் மரண பயத்தினின்றும் நீக்குவரென்னும் குறிப்பையுடையது. நல்குவர் - தண்ணளி செய்வர். சிற்றம்பல தரிசனம் யமபயத்தை நீக்குமென்றபடி.