பக்கம் எண் :

394குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

521.
பொற்றாது பொதிந்த சிற்சபை பொலியப்
பச்சிளங் கொடியொடு படரும்
செக்கர் வார்சடைக் கற்பக தருவே.

    இஃது ஈற்றயலடி முச்சீராய் ஏனையவடி நாற்சீராய் வந்தமையால் நேரிசை ஆசிரியம். இஃது அடிதோறும் முதற்சீர் முரணத் தொடுத்தமையால் அடி முரண். இதனுள், பொதிந்த சிற்சபை என நேரொன்றாசிரியத்தளையும், சிற்சபை பொலிய என நிரையொன்றாசிரியத்தளையும் வந்தவாறு காண்க. இதனானே ஆசிரியம் மூன்றடிச் சிறுமையுடைத்தென்பதூஉம் அறிக.    
(41)

522.
பூஉந் தண்ண் புனமயி லகவ
மாஅங் குயில்கள் சாஅய்ந் தொளிப்பக்
கோஒ டரங்கண் முசுவொடும் வெரீஇக்
காந றழீஇக் கவிழ்ந்ந் தொடுங்கச்
சூஉன் முதிர்ந்து காஅல் வீஇழ்
வாஅன் றாஅழ் மழைப்பெய றலைஇத்
தேஎன் றாஅழ் பூஉங் காஅ
வளங்ங் கனிந்த மணிமன்றுள்
விளங்ங் கொளியை யுளங்கொள றவமே.

    இதுவுமது. இஃது அடிதோறும் முதற்கண்ணே அளபெடுத்தமையால் அடியளபெடு. இதனுள் இணையளபெடை முதலாகிய விகற்பம் ஏழும் முறையானே வந்தவாறு காண்க. ஏனைத் தொடு ஏழும், விகற்பம் இருபத்தெட்டும் முன்னர்க் காட்டப்பட்டன.    
(42)


    521. பொற்றாது - பொன்னாகிய உலோகம். பச்சிளங்கொடி - சிவகாமவல்லி யம்மை. செக்கர் - செந்நிறம். கற்பகத்தருவிற்காமவல்லி படர்தலின் இங்கே சிவகாமவல்லியை அவ்வல்லியாக உருவகித்தனர். (பி-ம்.) ‘கற்பகத்தரு’. கற்பகதருவென்று உருவகம் செய்ததற் கேற்ப, வேரென்னும் பொருளும் தோற்றச் சடையைக் கூறினார்; சடை - வேர்.

    522. மயில் - முல்லைநிலக் கருப்பொருளாதலின் புனமயிலென்றார்; புனம் - முல்லைநிலம். மாஅங் குயில்கள் - மாமரத்தில் வாழுங் குயில்கள்.சாய்ந்து - மெலிந்து. கோடரங்கள் - குரங்குகள். முசு - ஒருவகைக் குரங்கு கால். தழீஇ - குளிரால் இரண்டு கால்களையும் கைகளாற் கட்டிக் கொண்டு; இந்த நிலையைக் குன்னாக்கலென்றும் முள்காந்திருத்தலென்றும் கூறுவர்; “மந்திகூர” (நெடுநெல். 9). கால் - மழைக்கால். தலைஇ - பெய்து.

    மழைபெய்யுங் காலத்து மயில் களிப்பினால் அகவ, குயில் மெலிய, குரங்குகள் ஒடுங்கின.