பக்கம் எண் :

424குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

553.
செவ்வாய்க் கருங்கட்பைந் தோகைக்கும் வெண்மதிச் சென்னியற்கும்
ஒவ்வாத் திருவுரு வொன்றே யுளதவ் வுருவினைமற்
றெவ்வாச் சியமென் றெடுத்திசைப் பேமின் னருட்புலியூர்ப்
பைவாய்ப் பொறியர வல்குலெந் தாயென்று பாடுதுமே.

    இது நேரசை முதலாகிய கட்டளைக் கலித்துறை. இதன் முதலடி முரண்டுக்கி வந்தமையால் வழிமுரண்.     
(73)

554.
கரும்புஞ் சுரும்பு மரும்பும் பொரும்படைக் காமர்வில்வேள்
இரும்புங் கரைந்துரு கச்செய்யு மாலிறும் பூதிதன்றே
விரும்பும் பெரும்புலி யூரெம்பி ரானருண் மேவிலொரு
துரும்பும் படைத்தழிக் கும்மகி லாண்டத் தொகுதியையே.

    இது நிரையசை முதலாகிய கட்டளைக் கலித்துறை. இதன் முதலடி வழியெதுகை.    
(74)


    553. பைந்தோகை - உமாதேவியார். திருவுருவொன்று: 110, 534. வாச்சியம் - பொருள். (பி-ம்.) ‘எவ்வாச் சியத்தி னெடுத்திசைப்பேம்’. பை வாய்ப் பொறியரவல்குலெந்தாய்: சிலேடை; அரவுபோன்ற அல்குலையுடைய எம் தாயே எனவும், அரவை யணிந்த அல்குலையுடைய எம் தந்தையே எனவும் இரு பொருள் கொள்க. அல்குல் - பின்தட்டு; ஆடவர்க்கும் கூறப்படும் (539.)

    554. கரும்பு காமனுக்கு வில்; சுரும்பு நாண்; அரும்பு அம்பு “சுருப்பு நாண் கருப்புவி லருப்புக்கணை தூவ” (மணி. 18:105). இரும்பு - இரும்பு போன்ற மனம். மென்மையாகிய கருவிகளையுடைய காமன் இரும்பு போன்ற நெஞ்சத்தையும் உருக்குதல் இறைவன் அருளினாலமைந்த தென்றபடி; 187-ம் செய்யுளைப் பார்க்க; “யானை யரதம் பரியா ளிவையில்லை, தானு மநங்கன் றனுக்கரும்பு - தேனார், மலரைந்தால் வென்று வடுப்படுத்தான் மாரன், உலகங்கண் மூன்று மொருங்கு” (தண்டி. 77, மேற்.) இறும்பூது - வியப்பு. ஒரு துரும்பும் இறைவன் திருவருளுண்டாயின் படைத்தல் முதலிய செயல்களைச் செய்யுமென்றவாறு. இறைவன் ஓர் இயக்க வுருவினனாகி ஒரு துரும்பை நாட்டி அதனை அசைக்கும்படி தேவர்களுக்குக் கூற, அவர்கள் அங்ஙனம் செய்ய இயலாமல் தம் தருக்கழிந்த செய்தி இங்கே நினைவுக்கு வருகின்றது.