பக்கம் எண் :

450குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

நேரிசை வெண்பா
585.
ஆரூரே யூர்பே ரருண்மாசி லாமணியென்  
றோரூர்பே ரில்லாற் குரைத்தேற்குப் - பாரேறப்  
பொய்யென்றான் மெய்யென்றான் பொய்யான பொய்யுடலை  
மெய்யென்றார் பொய்யென்றார் மீண்டு.    
(21)

கட்டளைக் கலித்துறை
586.
மீளா மணிமந் திரமருந் தாற்சென்ம வெவ்விடநோய்
வாளா மணியொன்றி னான்மீண்ட வாவம் மணிபிறர்கொண்
டாளா மணியெமை யாட்கொள்சிந் தாமணி யைந்தவித்தோர்
சூளா மணிமெய்ச் சுடர்மாசி லாமணி சூழ்ந்திடினே.        
(22)

நேரிசை யாசிரியப்பா
587.
சூழ்போய் நிவந்த வாழ்கட லுலகத்
தின்னருட் டிறத்தா லிடைமரு தமர்ந்த
பொன்னவிர் கடுக்கைப் புரிசடைப் புங்கவன்
அமையாக் காத லிமையவல் லிக்கு
5.
வழிபடன் முறைமை விழுமிதி னுணர்த்தத்
தானே தன்னைப் பூசனை புரிந்தென

    585. ஆருரே ஊர். ஓரூர் பேர் இல்லான்: “ஊரும் பேருமுருவு மில்லான், ஆயினுந் திருவா வடுதுறை யூரணைந், தம்பல வாண னெனும் பெய ராதரித், தறிவே யுருவா யமர்ந்தகுரு ராயன்” (இ. கொ. பாயிரம்.) (பி-ம்.) ‘உரைத்தேற்கும்’.

    ஏற - மிகுதியாக. உலகத்தைப் பொய்யென்றார்; தான் அங்ஙனம் கூறியது மெய்யென்றான். இதற்குப் பிறவாறு கூறுவாருமுளர். மெய்யென்பது எதிர்மறை இலக்கணையால் உடலுக்குப் பெயராக வழங்குகின்றது.

    586. மணி மந்திர மருந்தால் மீளாச் சென்மநோய். நோயை நீக்குவதற்கு மணிமந்திர ஒளஷதங்களாகிய மூன்றும் பரிகாரமாகக் கூறப்படும். அவை இந்நோய்க்கு உதவா என்றார். இம்மூன்றனாலும் தீர்த்தற்கரிய நோயொன்று ஒரு மணியால் மட்டும் நீங்கியது. மீண்டவா - தீர்ந்தது என்ன வியப்பு. பிறர் கொண்டு ஆளா மணி - ஏனைய மணிகள்போல் பிறரால் விலைக்குக் கொள்ளப்பெற்று அவரால் பயன்படுத்தற்குரியதல்லாத மணி; ஆளுதல் - பயன்படுத்தல்; வழக்கு. ஐந்து அவித்தோர் - ஐம்பொறிகளையும் அடக்கினோர். சூழ்ந்திடினே மெய்ச்சுடர் மாசிலாமணி யாகுமென்க.

    587. (அடி, 1-6) திருவிடை மருதூரில் இறைவன் தன்னைத் தான் பூசித்தானென்பது புராணவரலாறு. இமையவல்லிக்கு உணர்த்த - திருவிடை மருதூரில் தவம் புரிந்த உமா தேவியாருக்கு அறிவித்தற்பொருட்டு. புரிந்தென - புரிந்ததுபோல.