பக்கம் எண் :

474குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

பழுத்ததவக் கோலமுங்கைச் சங்கமுமா ழியுங்கண்டு     
     பணிந்தே மாகின்     
முழுத்ததவத் தால்யாமு மாலாயி னேங்கூடி     
     முயங்கு வீரே.    
(22)

கட்டளைக் கலித்துறை
621.
முயலாம லேதவ முத்தித் திருவை முயங்கநல்கும்  
கயலார் பெருந்தடங் கண்ணிபங் கார்ருட் காசியிலே  
செயலாவ தொன்றிலை வாளா நெடுந்துயில் செய்யுமுங்கள்  
பயலாக வேபணி செய்வார் புவனம் படைப்பவரே.      
(23)

கட்டளைக் கலிப்பா
622.
படுத்த பாயுட னேபிணி மூழ்கினும்
   பல்வி ழுந்து நரைத்தற மூப்பினும்
அடுத்த திங்கிவர்க் கேபெரு வாழ்வெனும்
   அப்பெ ரும்பதி யெப்பதி யென்பிரேல்
விடுத்து விட்டிந் திரதிரு வும்புவி
   வெண்கு டைக்கு ளிடுமர சாட்சியும்
கடுத்த தும்பு களத்தாரைத் தேடுவார்
   காத லித்து வருந்திருக் காசியே.    
(24)

யாமும்: உம்மை இறந்தது தழுவியது. மாலாயினேம் - மயக்கமுடையேமாயினேம், திருமாலாயினேம். யாமும் மாலாயினே மென்றது தலைவனும் தலைவியும், “ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப” (தொல். களவு. 2) என்னும் இலக்கணப்படி ஒத்திருத்தல் வேண்டுமென்பதை அமைத்தபடி.

    621. இச்செய்யுள் தொண்டர்களை நோக்கிக் கூறியது.

    தவம் முயலாமலே, அடியார்க்கு முத்தித்திருவை முயங்க நல்குதல், “நேரிழைமுத் தித்திருவை மணம்புணர்வார்க்கு” (600), “நறைக்குழன்முத் தித்திருவை முயங்கிடவுங் கடவேன் கல்லோ” (637) என்னும் செய்யுட்களிலும் காணப்படும். நெடுந்துயில் செய்யும் - மரணமடையுங்கள்; சும்மா தூங்கிக் கொண்டிருங்கள் என்பது மற்றொரு பொருள். பயலாகவே - வேலை செய்யும் சிறுவனாகவே; பயல் - பக்கம் எனலுமாம். புவனம் படைப்பவர் - பிரமதேவர்.

    622. யாவரும் வெறுத்தற்குரிய பிணியாலும் மூப்பாலும் வருந்தி இறக்கும் நிலையை அடைந்தோரைக் கண்டவர், அதனால் தாம் துன்புறாமல் ‘இவருக்குப் பெருவாழ்வு கிட்டியது’ என்று துணிந்து மகிழ்ந்து சொல்லுதற்குரிய இடம் ஒன்று உண்டு; அது காசித்தலமாகும்.

    (பி-ம்.) ‘பிணி மூழினும்’. அற - மிக. பெருவாழ்வு அடுத்தது. இந்திர திருவையும் அரசாட்சியையும் விடுத்துவிட்டு.

    இச்செய்யுளில் பிணி மூப்புச் சாக்காடென்பன முறையே அமைந்துள்ளன.

    அப்பெரும்பதி காசியே.