பக்கம் எண் :

480குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

நேரிசை யாசிரியப்பா
636.
பொன்னுருக் கன்ன பூந்துணரக் கொன்றையும்
வெள்ளிமுளை யன்ன விரிநிலாக் கொழுந்தும்
காந்தண் மலர்ந்தன்ன பாந்தளி னிரையும்
திரைசுழித் தெறியும் பொருபுனற் கங்கையில்
5.
வெள்ளிதழ்க் கமலம் வள்ளவாய் விரித்தென
முழுநகை முகிழ்க்குங் கழிமுடை வெண்டலை
தோலடிச் செங்காற் பால்புரை வரிச்சிறைக்
கிஞ்சுக மலர்ந்த செஞ்சூட் டெகினத்
துருவெடுத் தகல்வான் றுருவியுங் காணாத்
10.
தொன்மறைக் கிழவநின் சென்னிமற் றியானே
கண்டுகொண் டனனிக் கடவுண்மா முடியெனப்
பெருமகிழ் சிறப்பக் குரவையிட் டார்த்து
வெள்ளெயி றிலங்க விரைவிற் சிரித்தெனப்
பெருவியப் பிழைக்கு மெரிபுரை சடையோய்
15.
ஆள்வழக் கறுக்கும் வாளமர்த் தடங்கண்
மின்னுழை மருங்குற் சின்மொழி மகளிர்

    636. (அடி, 1-14.) இறைவனது சடைமுடியிலிருக்கும் பிரமனது தலை பிரமனைப் பார்த்து, ‘நீ காணாத திருமுடியை யான் கண்டேன்’ என்று கூறிப் பரிகாசம் செய்கின்றமை கூறப்படும்.

    (1) கொன்றை மலருக்கு உருக்கிய பொன் உவமை.

    (2) நிலாக் கொழுந்து - பிறை.

    (3) பாந்தள் - பாம்பு.

    (6) வெண்டலை: எழுவாய்.

    (8) கிஞ்சுகம் மலர்ந்த - முள்ளுமுருங்கைப் பூவைப்போல மலர்ந்த. எகினம் - அன்னம்.

    (7-8) “பானிற வரிச்சிற, கன்னம்” (திரிமுகப்பாசுரம்).

    (9) துருவியும் - தேடியும்.

    (10) மறைக்கிழவ - பிரமனே. (பி-ம்.) ‘கிழவ சென்னிமற்’. நின் சென்னி யென்றமையின் அதனைச் சிவபிரானாற் கிள்ளப்பட்ட தலையென்று கொள்க.

    (12) குரவை - குரவைப்பாட்டு.

    வெண்டலை (6), சிரித்தெனப் (13) பெரு வியப்பிழைக்கும் சடையோய்.

    (15-26) காசியிலுள்ள மகளிர் கமுகமரத்திற் கட்டிய ஊசலிலாடுதல் கூறப்படும்.

    (16) மின் நுழை - மின்னலைப் போலச் சிறிய. (பி-ம்.) ‘மின்னிழை’.