பக்கம் எண் :

காசிக் கலம்பகம்485

கட்டளைக் கலித்துறை
642.
புயல்வண்ணக் கண்ணற் கொளித்தவக் 
    கள்வன் புணர்ப்பையெண்ணாள் 
கயல்வண்ணக் கண்ணிதன் கண்ணினுட் 
    புக்கது கண்டிருந்தும் 
செயல்வண்ணங் கண்டிலள் வாளாப் 
    புறத்தெங்குந் தேடுகின்றாள் 
வயல்வண்ணப் பண்ணை யவிமுத்தத் 
    தானை மனத்துள்வைத்தே.    
(44)


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
643.
வையமுழு தொருங்கீன்ற விடப்பாக
    ரானந்த வனத்தில் வாழும்
வெய்யதறு கண்மறவர் குலக்கொடியை
    வேட்டரசன் விடுத்த தூதா
கையிலவன் றிருமுகமோ காட்டிருகண்
    டொட்டுமுட்டைக் கதையிற் றாக்கிச்
செய்யகொடி றுடைத்தகல்வாய் கிழித்தரிவோ
    நாசியொடு செவியுந் தானே.    
(45)

    642. செவிலி கூற்று.

    கண்ணன்; இடுகுறிப் பெயர் மாத்திரையாய் நின்றது; “கருங்கண்ணனை யறியாமை நின்றோன்” (திருச்சிற். 53.) புணர்ப்பை - வஞ்சனையை. அகிலேசர் தன் கண்ணினுள்ளே புகுந்ததைக் கண்டிருந்தும்; “கடம்பவனேசனார், கண்புகுந்தென் கருத்து ளிருக்கவும்” (113); “கண்வழி நுழையுமோம் கள்வ னேகொலாம்” (கம்ப. மிதிலைக். 55.) பண்ணை - மருத நிலம்.

    அகிலேசரைத் தன் மனத்துள்ளே வைத்திருந்தும், இத்தலைவி அவரைப் புறத்தே தேடுகின்றாள்; இஃது என்ன பேதைமை?

    643. தன் மகளை மணஞ்செய்ய விரும்பித் திருமுகம் விடுத்த ஓர் அரசன் தூதனை நோக்கிச் சினந்து மறவர் தலைவனொருவன் கூறியது.

    இடப்பாகம் உமாதேவியாராதலின் ‘வையமுழு தொருங் கீன்ற விடப்பாகர்’ என்றார். கண் தொட்டு - கண்களைத் தோண்டி. முட்டு - எலும்பின் பொருத்துவாய்கள். கொடிறு - கன்னம். அரிவோம் - அறுப்போம்.