பக்கம் எண் :

காசிக் கலம்பகம்487

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
646.
கண்ணிருக்குந் திருநுதலுங் கனலிருக்குந்
   திருக்கரமுங் கலந்தோர் பேதைப்
பெண்ணிருக்கு மிடப்பாலும் பிறையிருக்கு
   மவுலியுமாய்ப் பிரிக்க லாகா
எண்ணிருக்குங் கணத்தொடுமா னந்தவனத்
   திருப்பாரை யெங்கே காண்பார்
பண்ணிருக்கு மறைகளுமெண் கண்ணனுங்கண்
   ணனுமமரர் பலருந் தானே.    
(48)

கட்டளைக் கலித்துறை
647.
பல்லாண்டு தம்மைப் படைத்தவத்
    தேவரைப் பார்த்துப்பைம்பொன்
வில்லாண்ட தோள்கொட்டி யெந்தையர்
    கோல விடம்பழுத்த
அல்லாண்ட கண்டத்தெம் மாதிப்
    பிரானவி முத்தத்திலே
சில்லாண் டிருந்து சிவமாய்ச்
    செலுஞ்சிறு செந்துக்களே.        
(49)

    646. சாரூபம் பெற்றவர்கூட்டத்தோடும் இருக்கும் அகிலேசரை வேதமும் பிரமனும் திருமாலும் பிற தேவர்களும் எங்ஙனம் வேறு பிரித்தறிய முடியும்?

    கணம் - சாரூபம் பெற்றோருடைய கூட்டம். என் கண்ணன் - பிரமதேவன்; “என்கணனைக் குட்டியகுட் டெங்கேனும் பட்டதோ” (சிவஞான வள்ளலார்.) எட்டுக் கண் இருந்தும் கண்டு தெளியகில்லானென்பது குறிப்பு.

    647. இத்தலத்தில் இறந்த சிற்றுயிர்கள் சாரூபம் பெற்றுப் பல ஆண்டுகளாகத் தம்மைப் படைத்து அளித்த தேவர்களைப் பார்த்து, “நீவிர் முன்னிருந்த நிலையிலேயே இருக்கின்றீர். யாம் நும்மினும் மேற்பட்ட நிலை யடைந்தோம்” என்று தோள்களைக் கொட்டிச் சிவலோகத்திற்குச் செல்லா நிற்கும்.

    பைம்பொன் வில் - மேருமலையாகிய வில்; சாரூபம் பெற்றமையின் அவர் தோள் இவ்வில்லை உடையதாயிற்று. தோள் கொட்டுதல் மகிழ்ச்சியின் விளைவு. எந்தையர் - அகிலேசர்; அர்: பகுதிப்பொருள் விகுதி; “பூவர் சோலை” (சீவக. 1328) என்புழிப்போல. (பி-ம்.) ‘எந்தையிற் கோல’.

    சிறு செந்துக்கள் தோள் கொட்டிச் சிவமாய்ச் செல்லும்.