பக்கம் எண் :

490குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

        அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
652.
குன்றிரண்டு சுமந்தொசியுங் கொடியன்னீ  
    ரவிமுத்தங் குடிகொண் டாகம்  
ஒன்றிரண்டு வடிவானார் திரள்புயத்து  
    மார்பகத்து முமிழ்தேன் பில்கி  
மின்றிரண்ட தெனப்புரளும் பொலங்கடுக்கைத்  
    தாமத்தின் விரைத்தா தாடிப்  
பொன்றிரண்ட தெனவிருக்கும் பொறிவண்டு  
    செய்தவமென் புகலு வீரே.    
(54)

    கொச்சக் கலிப்பா
653.
புகுமே மதிக்கொழுந்தும் புன்மாலைப் போதும்
நகுமே கிளையு நகைத்தா னமக்கென்னே
உகுமே யுயர்காசி யுத்தமரைக் காணத்
தகுமேயப் போதிதழித் தாரும் பெறலாமே.    
(55)

    652. இறைவனது மாலையைப் பெறாமல் வாடும் தலைவி பாங்கியரை நோக்கிக் கூறியது.

    எனக்கு அரிதாயிருக்கும் கொன்றைமாலை வண்டுகளுக்கு எளிதாயிருக்கின்றதேயென்று இரங்குகிறாள் (657).

    இரண்டு வடிவு - ஆண் வடிவும் பெண் வடிவும். பொலங்கடுக்கைத் தாமம் - பொன்னிறத்தையுடைய கொன்றை மலர்மாலை. அதன் தாதில் ஆடியதாதலின், கரிய வண்டு பொன் திரண்டதென இருந்தது. செய்தவ மென்னென்றது அதனை அறிந்து அத்தவமாற்றியேனும் அவர் மாலையைப் பெறுவேனென்னும் உட்கோளுடையது.

    653. தலைவி கூற்று.

    மதியும் மாலையும் அலரும் தன்னைத் துன்புறுத்துதலை நினைந்து இரங்கப்புக்க தலைமகள் அவை தன் உயிர்போதற்குக் கருவிகளாகுமென்றும் உயிர் நீத்தவுடன் இறைவனது அருளைப் பெறலாமென்றும் தேறிக் கூறியது இது.

    மதிக்கொழுந்தும் மாலைப்புழுதும் புகும். கிளை - உறவினர். நகைத்தால் நமக்கு என்ன குறைவு நேரும்? மதிக்கொழுந்து முதலியவற்றால் உயிர் நீங்கும். காணத்தகும் - காணுதல் உறுதியாம்; தகும்: தேற்றவினை. அகிலேசர் அத்தலவழக்கப்படி பிரணவோபதேசம் செய்யப் புகுவராதலின் காணத்தகுமென்றாள். இதழித்தார் - கொன்றைமாலை. சாரூபம் பெறுதல் ஒருதலையதலின் அப்போது கொன்றை மாலையைப் பெறலமென்று கூறினாள்.