பக்கம் எண் :

504குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கட்டளைக் கலித்துறை
680.
முத்திக்கு வேட்டவர் மோட்டுடற்
   பார முடைத்தலையோ
டத்திக்குஞ் சாம்பற்கு மோம்பின
   ராலிவை யன்றியப்பாற்
சித்திப் பதுமற் றிலைபோலுங்
   காசிச் சிவபெருமான்
பத்திக்குக் கேவல மேபல
   மாகப் பலித்ததுவே.     
(82)

கலிநிலைத்துறை
681.
பல்வே றுருவாய் நின்றருள் காசிப் பதியுள்ளீர்
வில்வே றில்லை பூவல தம்பும் வேறில்லை
அல்வே றல்லாப் பல்குழ லாரை யலைக்கின்றான்
சொல்வே றென்னே பார் மனங்கன் றொழிறானே. 
(83)

    முத்து ஏறுண்டு முத்தால் அடிக்கப்பட்டு. மன்மதன் தன் வில்லை வளைக்கும்போது அதனிடத்திலிருந்து தெறித்த முத்தால் அடிபெற்ற வண்டு ஒலிக்க, அவ்வொலியை மன்மதனது நாணொலியென்று நினைந்து அஞ்சி அறிவழிந்தாள்; இனி மன்மதன் போர் புரியத் தொடங்கிவிடின் இவளுக்கு என்ன துன்பம் உண்டாகுமோ?

    மன்மதனது வில் நாணும் வண்டாதலின் அடிபட்ட வண்டினொலியை நாணொலியென்றஞ்சினாள். என் ஆம் - என்ன துன்பம் உண்டாகுமோ? பொன் அசும்பு தசும்பு - பொன் துளிக்கின்ற விமான கலசத்தை. அதனை ஒளி மிகுதியினால் சூரியனென எண்ணித் தாமரை மலர்ந்தது; இது திரிபதிசய அணி.

    680. முத்திக்கு - முத்தியை; வேற்றுமை மயக்கம். உடற் பாரத்தை ஓம்பினர். காசியில் இறக்க வேண்டுமென்று எண்ணி அங்கே சென்றடையும் வரையில் உடம்பைப் பாதுகாப்பாரை எண்ணிக் கூறியது இது. சாரூபம் பெற்றவர் முடைத்தலை. என்பு சாம்பலாகியவற்றைப் பெறுவராதலின் அவற்றிற்காக உடம்பை ஓம்பினரென இழிப்புத் தொனிபடக் கூறினர்; 600, தாழிசை பார்க்க. அத்தி - என்பு. கேவலம் - முத்தி. இழிந்த தன்மை.

    இது சாரூபம் பெறுதலைப் பழிப்பது போலப் புகழ்ந்தபடி.

    681. தலைவி கூற்று.

    நவந்தருபேதம், இருபத்தைந்து மூர்த்தம், அறுபத்து நான்கு வடிவம் முதலிய மூர்த்தபேதங்களாகச் சிவபெருமான் எழுந்தருளியிருத்தலின், ‘பல்வேறுருவாய்’ என்றாள். பூவலது வில் வேறில்லை; 177-ஆம் செய்யுளின் குறிப்புரையைப் பார்க்க. அம்பும் அப்பூவேயன்றி வேறில்லை.