பக்கம் எண் :

506குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

நேரிசை வெண்பா
684.
ஆனந்த வல்லியுட னானந்தக் கானகத்தே
ஆனந்தக் கூத்தா டருட்கடலை - ஆனந்தம்
கொள்ளத் திளைத்தாடுங் கூடாதே லிப்பிறவி
வெள்ளத் திளைத்தாடு வீர்.    
(86)

கலிவிருத்தம்
685.
வீர மென்பது வின்மதற் கேகுணம்
கோர மென்பது கொண்டிருந் தாவதென்
ஈர மென்ப திலையிவர்க் கென்றதால்
வார மென்பதி வாழவி முத்தரே.    
(87)

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
686.
முத்து நிரைத்த குறுநகையீர் முளரிக்
    கணையான் கணைகடிகைப்
பத்து நிரைத்தா னினித்தொடுக்கிற் பாவைக்
    கொருதிக் கிலைபோலும்
ஒத்து நிரைத்த வுடுநிறையோ டொன்றோ
    பலவோ வெனவரும்பூங்
கொத்து நிரைத்த பொழிற்காசிக் குழகற்
    கொருவர் கூறீரே.    
(88)

    நீர் அமுது பெறாத குறையைப் போக்கிக் கொள்வீரென்பாள் போலத் தலைவிக்கு அருள்புரிதலை வேண்டினாள்.

    684. ஆனந்தவல்லி - விசாலாட்சியம்மை. ஆனந்தக் கானகம் - காசி. ஆனந்தக் கூத்து ஆடும் அருட்கடல் - விசுவநாதர். அருட்கடலைத் திளைத்து ஆடும்; ஆடும் - ஆடுவீராக. கூடாதேல் - அச்செயல் கூடாதேல். பிறவி வெள்ளத்து இளைத்து ஆடுவீர் - பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து மெலிவுற்று அலைவீர்.

    685. தலைவி கூற்று.

    அவிமுத்தரே, உமக்கு அகோரரென்னும் பெயர் இருந்தும் பகைவரை ஒடுக்கும் வன்மை இல்லை; உம்மை அடைந்தாரைக் காக்கும் ஈரமும் இல்லை; இரண்டுமில்லாத உமக்குச் சொந்தமான குணம் வேறு யாது உண்டு?

    வீரமென்பது வில்லையுடைய மன்மதனிடத்திலேயுள்ள குணம். மதற்கே; ஏ பிரிநிலை. அவன் என்னைத் துன்புறுத்துகின்றானென்றபடி. கோரம் - மறம்; இங்கே அகோர வடிவத்தைச் சுட்டி நின்றது. ஆவது என் - உண்டாகும் பயன் யாது? ஈரம் - அன்பு . வாரம் - உரிமையான குணம். வாழ்பதியை அவிமுத்தமாகக் கொண்டவரே.

    686. தோழி கூற்று.