பக்கம் எண் :

மதுரை மீனாட்சியம்மை குறம்529

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
3.
செண்டிருக்கும் வடவரையிற் சேலிருந்து
   மரசிருக்குந் தென்ன ரீன்ற    
கண்டிருக்கு மதுரமொழிக் கனியிருக்குந்
   துவரிதழங் கயற்கட் பாவை
வண்டிருக்கு நறைக்கமல மலரிருக்கும்
   பரிபுரத்தாண் மனத்துள் வைத்துக்
கொண்டிருக்குந் தமிழ்முனிவன் குடியிருக்கும்
   பொதியமலைக் குறத்தி நானே.

சிந்து
4.
மங்கை குங்குமக் கொங்கை பங்கயச்
செங்கை யங்கயற் கண்ணினாள் மறை பண்ணினாள்
பங்க னைக்கழ லங்க னைச்சொக்க
லிங்க னைக்கூடி மேவுவாய் கொல்லிப் பாவையே.

வேறு
5.
வஞ்சி யேயப ரஞ்சி யேமட மயிலே வரிக் குயிலே
கொஞ்சி யேபழி யஞ்சி யாருனைக் கூடுவா ரினி யம்மே.

வேறு
6.
புழுகாலே தரைமெழுகு பிள்ளை யார்வை
பொற்கோல மிட்டுநிறை நாழி வையாய்.

    3. செண்டு இருக்கும் வடவரை - கரிகாலன் செண்டாலெறிந்தமையால் அச்செண்டின் அடையாளம் இருக்கும் இமயமலை; “செண்டு கொண்டுகரி காலனொரு காலினிமயச் சிமயமால்வரை திருத்தரு ளி” (கலிங்கத்துப். 178). சேல் இருத்தும் - சேலைப்பொறித்த; சேல் - பாண்டியரது அடையாளப் பொறி. (பி-ம்.) ‘சேலிருக்கு’. அதனை அவர் இமயத்திற் பொறித்த செய்தி, இக்குறத்தின் 44-ஆம் பாட்டாலும், “கயலெழுதிய விமய நெற்றியின்” (சிலப். 17 : 1) என்பதனாலும் விளங்கும். தென்னரீன்ற பாவையென இயைக்க. பரிபுரத்தாள் - சிலம்பை யணிந்த திருவடி. தமிழ் முனிவன் - அகத்தியர்.

    4. கழல் அங்கனை - தேவர்கள் உடம்பினின்றும் கழன்ற என்பை அணிந்தவரை.

    5. அபரஞ்சியே - புடமிட்ட பொன் போல்வாய். பழியஞ்சியார் - சொக்கநாதர். கொஞ்சிக் கூடுவார்.

    6. நிறைநாழி - நெல்லை நிறைத்த நாழி; நாழி: ஒருவகை முகத்தலளவைக் கருவி.