40. | கருமலையச் செருமலையுங் கைம்மலைய மன்னர்தொழ | வருமலையத் துவசனருண் மடக்கொடியைப் பாடுவனே. | |
41. | விண்புரக்குங் கதிர்மௌலி முடிகவித்து வெண்குடைக்கீழ் | மண்புரக்கு மபிடேக வல்லியைநான் பாடுவனே. | |
42. | வெம்புருவச் சிலைகுனித்து விழிக்கணைக ளிரண்டெந்தை | மொய்ம்புருவத் தொடுத்தெய்த மொய்குழலைப் பாடுவனே. | |
43. | ஊன்கொண்ட முடைத்தலையிற் பலிகொண்டார்க் குலகேழும் | தான்கொண்ட வரசாட்சி தந்தாளைப் பாடுவனே. | |
44. | வானவர்கோன் முடிசிதறி வடவரையிற் கயலெழுது | மீனவர்கோன் றனைப்பயந்த மெல்லியலைப் பாடுவனே. | |
45. | கான்மணக்குஞ் சடைக்காட்டிற் கவின்மணக்குங் கடிக்கொன்றைத் | தேன்மணக்கும் பிறைநாறுஞ் சீறடியைப் பாடுவனே. | |
46. | எவ்விடத்துந் தாமாகி யிருந்தவருக் கருந்தவரும் | வெவ்விடத்தை யமுதாக்கும் விரைக்கொடியைப் பாடுவனே. | |
47. | வைத்தபகி ரண்டமெனு மணற்சிற்றி லிழைத்திழைத்தோர் | பித்தனுடன் விளையாடும் பெய்வளையைப் பாடுவனே. | |
48. | இலைக்குறியுங் குணமுநமக் கென்பார்க்கு வளைக்குறியும் | முலைக்குறியு மணிந்திட்ட மொய்குழலைப் பாடுவனே. | |
40. கருமலைய - கருப்பம் கலங்க. கைம்மலைய மன்னர் - யானைகளையுடைய அரசர். 42. மொய்ம்பு உருவ - தோளை உருவிச் செல்ல. 43. முடை - நாற்றம். 44. மீனவர் கோன் - உக்கிர குமார பாண்டியர். 45. கான் - நறுமணம். சிவபெருமான் உமாதேவியின் ஊடற் காலத்தில் அதனை நீக்கும்பொருட்டு வணங்குதலின் இறைவியின் சீறடி அவர் அணிந்த பிறை நாறியது. 46. அருந்த அரும். 47. பித்தன் - சிவபிரான். “சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசைய” (குமர. 16) என்னும் செய்யுளைப் பார்க்க. 48. குறி - பெயர்; உருவமுமாம். என்பார்க்கு - சிவபெருமானுக்கு.
|