பக்கம் எண் :

தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை545

  கட்டளைக் கலித்துறை
14.
நங்காய் திருத்தில்லை நன்னுத லாய்நுத னாட்டமொத்துன்
செங்காவி யங்கண் சிவப்பதென் னேசெழுங் கங்கையைநின்
பங்காளர் நின்னைப் பணியுமப் போதுகைப் பற்றிமற்றென்
தங்கா யெழுந்திரென் றாலவட் கேது தலையெடுப்பே.

  நேரிசை வெண்பா
15.
தலைவளைத்து நாணியெந்தை தண்ணளிக்கே யொல்கும்
குலைவளைத்த கற்பகப்பூங் கொம்பர் - கலைமறைகள்
நான்குமரி யார்க்கிந்த ஞாலமெலா மீன்றளித்தும்
தான்குமரி யாகியிருந் தாள்.

கட்டளைக் கலித்துறை
16.
தாளிற் பதித்த மதித்தழும் புக்குச் சரியெம்பிரான்
தோளிற் பதித்த வளைத்தழும் பேதொல்லைத் தில்லைப்பிரான்
வாளிற் பதித்த முலைத்தழும் பங்கவர் மார்பினிலந்
நாளிற் பதித்ததொன் றேயெம் பிராட்டி நடுவின்மையே.

    14. நுதல் நாட்டம் - இறைவருடைய நெற்றிக்கண்ணை. கங்கை தலையிலிருக்கின்றாளே என்பது பற்றி நீ சினப்பதனாற் பயன் என்? பணியும் போது உடன் விழும் கங்கையின் கையைப் பற்றி எழுந்திரு என்றால். இறைவன் உனக்கு அஞ்சித் தலையில் கங்கையை ஒளித்து வைத்திருக்கின்றார்; நீ அவளைத் தங்கையென்பாயாயின், அவள் உன்னோடு இருப்பாளென்றபடி. தலை எடுப்பு - தலையில் எடுத்தல், இறுமாப்பு; சிலேடை.

    நின் தங்கையென்று கூறின் இறுமாப்பு இராது என்றபடி.

    15. இறைவன் தண்ணளிக்குத் தலைவளைத்து நாணி ஒல்கும் கொம்பர்: சிவகாமவல்லி. மறைகள் நான்கும் மரியார்க்கு வேதங்கள் நான்கிலும் மருவியவருக்கு. தான்: அசைநிலை. குமரி - இளங்கன்னி.

    16. வளைக்குப் பிறை உவமை: (குமர. 527). வரளின் ஒளியோடு. நடுஇன்மை - நடுவு நிலையில்லாமை. இறைவர் மதித்தழும்பைச் செய்தற்கு வளைத்தழும்பைச் செய்தாய். அவர் ஒன்றும் நின் மார்பிற் செய்யாதிருப்பக் கொங்கைத் தழும்பை மிகையாகச் செய்தாய். இது நடுநிலையின்மை யாகும்.