பக்கம் எண் :

546குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

  நேரிசை வெண்பா
17.
இன்றளிர்க்கைக் கிள்ளைக்கே யீர்ங்குதல் கற்பிக்கும்
பொன்றளிர்த்த காமர் பொலங்கொம்பு - மன்றவர்தம்
பாகத் திருந்தாள் பதுமத்தாள் பாவித்தாள்
ஆகத் திருந்தா ளவள்.

    கட்டளைக் கலித்துறை
18.
அல்லிக் கமலத் துணைத்தாள தென்றுமென் னாவிக்குள்ளே
புல்லிக் கிடந்தது போலுங்கெட் டேன்புன் மலக்கிழங்கைக்
கல்லிப் புலக்களை கட்டருள் பூத்துட் கனிந்தமலை
வல்லிக் கிலைகொன் மருங்கென் றிரங்கு மறைச்சிலம்பே.


நேரிசை வெண்பா
19.
மறைநாறுஞ் செவ்வாய் மடக்கிள்ளாய் பிள்ளைப்
பிறைநாறுஞ் சீறடியெம் பேதாய் - நறைநாறும்
நாட்கமலஞ் சூடே நறுந்துழாய் தேடேநின்
தாட்கமலஞ் சூடத் தரின்.

    17. தளிர்போன்ற கையிலுள்ள கிள்ளைக்கு. பொலங்கொம்பு - சிவகாமியம்மை. பாகத்திருந்தாளைப் பதுமத்தாளாகிய அவள் பாவித்தாளாகித் திருமாலின் ஆகத்து இருந்தாள். திருமாலென்னும் சொல்லை வருவிக்க. அவளென்பதை நெஞ்சறி சுட்டாக்கித் திருமகளெனப் பொருள்கொண்டு, பாகத்திருந்தாளது பதுமம் போன்ற தாள்களைப் பாவித்தாளாகித் திருமாலின் ஆகத்திருந்தாளென்று பொருள் கொள்ளலும் பொருந்தும்; ஆகம் - உடம்பு, மார்பு: சிலேடை.

    18. அல்லி - அகவிதழ். கல்லி - தோண்டி. கட்டு - களையெடுத்து. மருங்கு - இடை. ஒலிக்கும் மறையாகிய சிலம்புகள் சிவகாமவல்லியினுடைய தாள்களிலேயிருந்து என் ஆவிக்குள்ளே என்றும் பொருந்தின போலும். என் ஆவிக்குள் அத்தாள்கள் பொருந்த அவற்றோடு சிலம்புகளும் பொருந்தின போலுமென்றார்; ஆவி - உயிர், தடாகம்; சிலேடை.

    19. நின் திருவடித் தாமரைகள் கிடைக்கப்பெற்றால் பிரம பதவியையும் திருமால் பதவியையும் விரும்பேமென்றபடி. மறை நாறுஞ் செவ்வாய்: “மறைசெய்த வீர்ந்தண் மழலை” (13).