பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்67

மூடுங் கூழலாய் நின்கனிவாய்
   முத்தந் தருக முத்தமே
முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
   முலையாய் முத்தந் தருகவே.    
(5)

வேறு
49.
பைவைத்த துத்திப் பரூஉச்சுடிகை முன்றிற்
   பசுங்கொடி யுடுக்கைகிழியப்
பாயிருட் படலங் கிழித்தெழு சுடர்பருதி
   பருதிக் கொடுஞ்சி மான்றேர்

மொய்வைத்த கொய்யுளை வயப்புரவி வாய்ச்செல்ல
   முட்கோல் பிடித்துநெடுவான்
முற்றத்தை யிருள்பட விழுங்குந் துகிற்கொடி
   முனைக்கணை வடிம்புநக்கா

மைவைத்த செஞ்சிலையு மம்புலியு மோடநெடு
   வான்மீன் மணந்துகந்த
வடவரை முகந்தநின் வயக்கொடி யெனப்பொலியும்
   மஞ்சிவர் வளாகநொச்சித்

    49. மதுரையிலுள்ள மதிற்கொடிகளின் சிறப்பு இதிற் சொல்லப்படும்.

    (அடி, 1) பை - படம். துத்தி - படப் பொறி. சுடிகை முன்றில் - ஆதிசேடனது உச்சிப்பரப்பு. அதிலுள்ள கொடி போல்வாள் பூமிதேவி. அவளது உடுக்கை கடல். சுடர்ப்பருதி - சூரியனது. கிழிய எழு பருதியென்க. பருதியையும் கொடுஞ்சியையும் உடைய தேர்; பருதி - தேருருளை; மான்றேரென்பது தேரென்னும் மாத்திரையாய் நின்றது. (பி-ம்.) ‘பரிதி பரிதிக் கொடுஞ்சி மான்றேர்’.

    (2) சூரியனது தேரிற்கட்டிய புரவி வாவிச்செல்லும்படி. முட்கோல் - குதிரையை ஓட்டுதற்குரிய தாற்றுக்கோல்; என்றது இங்கே கொடியின் உச்சியிலுள்ள கூரிய உறுப்பை; அதுவே முட்கோலைப்போல உதவியது. செல்லப் பிடித்து என்க. துகிற் கொடி: எழுவாய். (பி-ம்.) ‘நிழற்றுந் துகிற்கொடி.’

    (2-3) துகிற்கொடிக்கும் அம்பிகையின் கயற்கொடிக்கும் சிலேடை. முனைக்கணை - முனையையுடைய அம்பினது. வடிம்பு - விளிம்பு. நக்காச் சிலை - பொருந்தாத சிலை; வெளிப்படை. சிலை - இந்திரவில், சேரரது விற்கொடி. அம்புலி - சந்திரன், சோழர்க்குரிய அழகிய புலிக்கொடி. மீன் - மீனராசி, கொடியிலெழுதிய மீன். உகந்த வடவரை