(570)
என்று சைவர்களைக் குறிக்க வழங்குவர். பரந்தாமமென்றும், பரமபதமென்றும் முக்தியைக் கூறுதல் வைஷ்ணவர்களிற் பெருவழக்கு; இவரும் முக்தியைக் குறிக்க அச்சொற்களை ஆளுவர் (600, 637, 654-5, 671, 692).
அரும்பதங்களும் தொடர்களும்
இவர் சில அரும்பதங்களும் தொடர்களும் வழங்குகின்றார்; அவை: இரைத்தல் - மோக முறுதல் (74), கலாம் - மயிற்கலாபம் (6, 18, 96), கொங்குரை - பொன் (178), சில - இரண்டு (105, 119, 451), தட்டுமாறல் (13), தயவு (132), திடுக்கம் (197), படலை - தொகுதி (26), புளிறுதல் (104) முதலியன. இவர் வாக்கில் அசும்பு, உச்சிமுச்சி, உவட்டெழுதல், தசும்பசும்பு, மழலைக்குதலை யென்பன பலவிடங்களில் வருகின்றன.
பாண்டிநாட்டுச் செய்திகள்
பாண்டிநாட்டனராகிய இவர் அந்நாட்டிலுள்ள செந்தில், மதுரை என்னும் இரண்டு தலங்களைப் பற்றியும் இயற்றியுள்ள பிரபந்தங்களில் அவற்றைச் சிறப்பிக்கின்றார். பாண்டிநாட்டின் பெருமை பலவிடங்களிற் கூறப்படுகின்றது. அந்நாட்டைத் தண்டமிழ் நாடென்றும், கன்னிவளநாடென்றும், வைகை வளநாடென்றும், கூறுகின்றார்; அந்நாட்டுக்குரிய பொருநை, வைகையென்னும் நதிகளையும், குமரித்துறை