108குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

ஞானசம்பந்தரைக் கழுமல மதலையென்றும் கவுணியர் பெருந்தகையென்றும், புகலியர் குரிசிலென்றும் சிறப்பிப்பர், அவர் ஞானப்பாலுண்டது, தாளம் பெற்றது, வையையில் ஏடு எதிரேறச் செய்தது, அமணரை வாதில் வென்றது என்னும் வரலாறுகள் சொல்லப்படுகின்றன.

    திருநாவுக்கரசர் தேவாரத்தில் உள்ள,

“பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்”
என்னும் அடியைப் பின்பற்றி,
“பொன்னடிக் கொன்றிது பன்னுவன் கேண்மதி”
(469)
என்பதை அமைத்தார். மதுரைப் பெருமானை அப்பர்,
“முளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றி”
என்பர். இவர் அதனைக் கருத்திற் கொண்டு,
“மூவலிங்கம்”
(140,206)
என்பர்.
    சுந்தரமூர்த்தி நாயனாரை நாவலர்பெருமான், ஒருபெரும் புலவன், பாவலனென வழங்குவர். அவர் சிவபெருமானுக்குச் சொன் மாலை சாத்தியதும், திருத்தொண்டத் தொகை பாடியதும், ஆற்றிலிட்ட பொன்னைக் குளத்தில் தேடியதும், சிவபிரானை இருமுறை பரவை நாச்சியார்பால் தூது அனுப்பியதுமாகிய வரலாறுகள் இவராற் குறிக்கப்பெறுகின்றன.

    மாணிக்கவாசகரைப் பைந்தமிழ் நவின்ற செந்நாப்புலவன், சொற்றமிழ் விரகனென்பர். அவரது திருக்கோவையாரைக் காமஞ் சான்ற ஞானப்பனுவலென்பர். அவர் சிவபெருமானைக் குதிரை வீரராக வரச் செய்த்து, ஊமையைப் பேச வைத்தது, திருக்கோவையாருக்குத் தில்லை நடராசப் பெருமானே பொருளென்றது ஆகிய செய்திகளை இவர் எடுத்தாள்வர்.

    பிற நாயன்மார்களுள் தில்லை மூவாயிரவரை,

“திருத்தொண்டத் தொகைக்கு முதற்பொரு ளாகி
 அருமறை கிளந்தநின் றிருவாக்கிற் பிறந்த
 அறுபதிற் றாகிய வைம்பதிற்று முனிவர்”
(472)
என்று பாராட்டி, அவருள் நடராசப் பெருமானும் ஒருவர் என்பர். சாக்கிய நாயனார் சிவபெருமானைக் கல்லாலருச்சனை புரிந்த செய்தியை 344-இல் உவமையாக அமைக்கின்றார். சண்டீசர் தம் தந்தை தாளெறிந்தத்தையும் சிவபெருமானணிந்த