பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்77

கானொழுகு தடமலர்க் கடிபொழிற் கூடல்வளர்
   கவுரியன் மகள்வருகவே
கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
   கயற்கணா யகிவருகவே.    
(5)

வேறு
59.
வடக்குங் குமக்குன் றிரண்டேந்தும்
   வண்டன் மகளிர் சிறுமுற்றில்
வாரிக் குவித்த மணிக்குப்பை
   வானா றடைப்ப வழிபிழைத்து

நடக்குங் கதிர்பொற் பரிசிலா
   நகுவெண் பிறைகைத் தோணியா
நாண்மீன் பரப்புச் சிறுமிதப்பா
   நாப்பண் மிதப்ப நாற்கோட்டுக்

கடக்குஞ் சரத்தின் மதநதியும்
   கங்கா நதியு மெதிர்கொள்ளக
ககன வெளியுங் கற்பகப்பூங்
   காடுங் கடந்து கடல்சுருங்க

மடுக்குந் திரைத்தண் டிறைவைகை
   வளநாட் டரசே வருகவே
மலயத் துவசன் பெற்றபெரு
   வாழ்வே வருக வருகவே.        
(6)

    (4) கவுரியன் - பாண்டியன்.

    59. வையைநதியின் வெள்ளநீர் வானளாவி வரும் நிலை சொல்லப்படும்.

    (அடி, 1) குங்குமக் குன்று - நகில்கள். வண்டல் மகளிர் - சிற்றில் விளையாடல் புரியும் பெண்கள். முற்றில் - சிறுசுளகால்,. வானாறு அடைப்ப - ஆகாய வழியை அடைத்தலினால். வழி பிழைத்து - செல்லும் கதி மாறி.

    (2) கதிர் - சூரியன். பொற்பரிசிலா - பொன்னாலாகிய பரிசிலாகவும்; பிறை கைத்தோணியா - பிறை சிறு தோணியாகவும் (432, 533.) நாண்மீன் - நட்சத்திரம். மிதப்பு - ஒரு மரத்தோணி.

    (3) குஞ்சரம் - ஐராவதம்.

    (4) (பி-ம்.) ‘மடக்கும்.’

    (முடிபு.) குப்பை அடைப்பப் பிழைத்து நடக்கும் கதிர்; கதிர் பரிசிலாகவும் பிறை தோணியாகவும் மீன் பரப்பு மிதப்பதாகவும் மிதப்ப. மதநதியும் கங்காநதியும் எதிர்கொள்ளக் கடந்த கடல் சுருங்க மடுக்கும் வைகையென்க.