பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்93

78.
தமரான நின்றுணைச் சேடியரி லொருசிலர்
   தடக்கையி னெடுத்தாடுநின்
தரளவம் மனைபிடித் தெதிர்வீசி வீசியிட
   சாரிவல சாரிதிரியா

நிமிராமு னம்மனையொ ராயிர மெடுத்தெறிய
   நிரைநிரைய வாய்க்ககனமேல்
நிற்கின்ற தம்மைநீ பெற்றவகி லாண்டமும்
   நிரைத்துவைத் ததுகடுப்ப

இமிரா வரிச்சுரும் பார்த்தெழப் பொழிலூ
   டெழுந்தபைந் தாதுலகெலாம்
இருள்செயச் செய்துநின் சேனா பராகமெனும்
   ஏக்கமள காபுரிக்கும்

அமரா பதிக்குஞ்செய் மதுரா புரித்தலைவி
   அம்மானை யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண்
   அம்மானை யாடியருளே.    
(5)

79.
உயிரா யிருக்கின்ற சேடியரின் மலர்மீ
   துதித்தவ ளெதிர்த்துநின்னோ
டொட்டியெட் டிப்பிடித் திட்டவம் மனைதேடி
   ஓடியா டித்திரியநீ

    78. அம்பிகை சேடியரோடு அம்மானையாடுதல் கூறப்படும்.

    (அடி, 1.) சிலர் பிடித்து வீசி வீசித் திரியா; திரியா - திரிந்து.

    (2) நிரை - வரிசை. நிற்கின்றது - நிற்கும் காட்சி. நிரைத்து வைத்தது - வரிசைப்படுத்தி வைத்த செயலை.

    (3) இமிரா - ஒலித்து (பி-ம்.) ‘ஆர்த்தெழும். அம்பிகை பல அம்மானைகளை, வீசி ஆடியதனால் வண்டுகள் அஞ்சி ஆர்த்தெழுந்தன. அவையெழவே அவற்றின்மேற் படிந்திருந்த பூந்தாது எங்கும் பரந்து செறிந்தது. சேனாபராகம் - சேனையின் புழுதி. (பி-ம்.) ‘எக்கரளகாபுரிக்கும்’.

    (3-4.) பூந்தாதின் செறிவை அம்பிகை திக்குவிசயம் செய்த காலத்தில் அவள் சேனைக்குமுன் எழுந்த தூளிப்படலம் போன்றதெனக் கருதி அளகாபுரியினரும் அமராபதியினரும் அஞ்சினர்.

    79. அம்பிகை அம்மானையாடுதலைக் கண்டு சிவபிரான் களித்தல் கூறப்படும்.

    (அடி, 1) மலர் மீது உதித்தவள் - திருமகள். ஒட்டி - பந்தயம் கூறி. உதித்தவள் திரிய.