முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
7. பெரியநாயகியம்மை கலித்துறை
செச்சை மலர்புரை வானோடு மேனி திறந்துகொண்டு
கச்சை யரவொன் றசைத்துக் கபாலங் கரத்தெடுத்துப்
பச்சை மயிலனை யார்மனை தோறும் படர்ந்திரக்கும்
பிச்சை யொழிகென் றொருவார்த்தை சொல்லெம் பெரியம்மையே.
(8)
சோதிப் பதியன்றி வேறொரு தெய்வந் தொழுதற்கில்லை
ஓதிற் பிறரென வச்ச முறாம லுயிர்களெல்லாம்
நீதிப் புதல்வர்க ளாயின வாதலி னீகொள்கற்புப்
பேதிப்ப தன்றுகண் டாய்குன்றை வாழும் பெரியம்மையே.
(9)
நின்னேய நாயக னென்றிருப் பாய்நினை நீத்தகன்று
தன்னேரில் பூவணத் தேயன்று போய்ச்செய்த தன்மையெலாஞ்
சொன்னே னலேனினி நின்னோ டொளிப்பதென் சொல்லுவன்யான்
பின்னே தெனக்குத் தருவாய்தென் குன்றைப் பெரியம்மையே.
(10)
நற்றவத் துன்னைப் பெறுமலைக் கென்னமுன் னல்கியுனைப்
பற்றுறக் கொண்ட தெலும்பே யணியும் பழமலைதான்
சற்றெனக் கையந் தராதுசொன் னும்மலைச் சாதியுள்ளே
பெற்றவர்க் கென்ன முலைவிலை குன்றைப் பெரியம்மையே.
(11)
கற்றா ரறிகுவர் மக்கடம் பேறெனக் கட்டுரைத்த
சொற்றா னொருபெண் ணொழித்ததென் பாரொடு தொல்லுலகின்
நற்றாண் மகற்பெறு கென்றாசி சொல்பவர் நாணவுனைப்
பெற்றான் மலையரை யன்குன்றை வாழும் பெரியம்மையே.
(12)
கரிய மிடறுடைப் பெம்மான் கரத்துழைக் கன்றொடுமோர்
அரிய முடியம் புலியோடு மேவிளை யாடுகின்றாய்
தெரிய வரிய பதினா லுலகுமென் சிற்றிலென்பாய்
பெரியவ ளென்ப துனக்கேது குன்றைப் பெரியம்மையே.
(13)

8. அரவ கச்சை ஒன்று அசைத்து-பாம்புக் கச்சையொன்றைக் கட்டி. கபாலம்-மண்டை யோடு. 9. சோதிப்பதி-பேரொளி வடிவாகிய இறைவன். பேதிப்பதன்று-மாறுபடுத்தக் கூடியதன்று. 10. நேயநாயகன்-அன்பு பொருந்திய தலைவன். பூவணம்-திருப்பூவணம். கதை யான் கூறுவேன்; அதற்குக் காரணம் எனக்கு விளக்குக என்பது. ஏதுவென்பதற்கு எப்பொருளெனலும் ஒன்று. 11. நல்கி-கொடுத்து. பற்றுற-பற்றுண்டாகுமாறு. ஐயந்தராது-ஐயப்பாடு நேராமல். முலைவிலை-பரிசத்தொகை. 12. மக்கள்தம் பேறு-மக்களைப் பெறுதலின் பெருமையை. பெண்ணொழித்ததென்பது-மக்களென்னும் பொதுமொழி ஆண்பாலையே உணர்த்திற்றென்பது. என்பாரொடு சொல்பவர் நாணவென இயையும். தாள்-முயற்சி. 13. மிடறு-கழுத்து. உழைக்கன்று-மான்கன்று. அம்புலி-திங்கள். எதுவென்பது காரணப் பெயரெனவும், எவ்வாறெய்திற்றெனவும் பொருள்படும். இச்செய்யுள் சிலேடை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்