8. நன்னெறி |
|
|
கடலே யனையம்யாங் கல்வியா லென்னும் அடலே றனையசெருக் காழ்த்தி-விடலே முனிக்கரசு கையான் முகந்து முழங்கும் பனிக்கடலு முண்ணப் படும்.
|
(7) |
|
|
உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினங்காத்துக் கொள்ளுங் குணமே குணமென்க-வெள்ளம் தடுத்த லரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுத்த லரிதோ விளம்பு.
|
(8) |
|
|
மெலியோர் வலிய விரவலரை யஞ்சார் வலியோர் தமைத்தா மருவிற்-பலியேல் கடவு ளவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே படர்சிறையப் புள்ளரசைப் பார்த்து.
|
(9) |
|
|
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம் வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்-திங்கள் கறையிருளை நீக்கக் கருதா துலகின் நிறையிருளை நீக்குமே னின்று.
|
(10) |
|
|
பொய்ப்புலன்க ளைந்துநோய் புல்லியர்பா லன்றியே மெய்ப்புலவர் தம்பால் விளையாவாந் துப்பிற் சுழற்றுங்கொல் கற்றூணைச் சூறா வளிபோய்ச் சுழற்றுஞ் சிறுபுன் துரும்பு.
|
(11) |
|
|
|
7. அனையம்-ஒப்பாவேம். அடலேறு-வளமை தங்கிய காளை. முனிக்கரசு-அகத்தியர். பனிக்கடல்-குளிர்ச்சி பொருந்திய கடல். அகத்தியரைச் சிவபெருமான் தம்மை ஒத்தவராக விதந்த சிறப்புடைமையினென்க. 8. கவர்ந்து-வயப்படுத்திக் கொண்டு. ஓங்கு-மேன்மேல் உயருகின்ற; இங்குப் பெருகுகின்ற. தடங்கரை-பெரியகரை. 9. விரவலர்-பகைவர். மருவில்-பொருந்தினால். பலி-பிச்சை. புள்ளரசு-கருடன். விரவலரை ஐ அச்சப் பொருளின் வந்த இரண்டனுருபு. கட்செவி-பாம்பு. இது கண்களையே செவிகளாகக் கொண்டது; அதனால் இப்பெயர் பெற்றது. 10. விழுமியோர்-மேலோர். கறையிருள்-தன்னிடமுள்ள கறுத்த இருள். நிறையிருள்-மிகுதியான இருள். கறை-மாசு; களங்கம். நல்லோர் நிலாவைப்போலத் தங்கட்கு எவ்வளவு துன்பமிருந்தாலும் அதனைக் கருதாது பிறர் துன்பத்தை நீக்குவர். 11. புல்லியர்-இழிந்தோர். மெய்ப்புலவர்-மெய்யறிவாளர்கள். துப்பு-வலிமை. புலன்கள் ஐந்தாவன: மெய், வாய், கண், மூக்குச், செவி என்பன. இவைகளால் அறியப்படுவன, ஊறு, சுவை, உருவம், நாற்றம், ஓசை ஆவனவாம். அற்பர்கள் புலன்கள் வழிப்பட்டுத் துன்பப்படுவர், உண்மையறிவு வாய்ந்தவர்கள் அவைகளால் துன்பப்படார்.
|
|
|
|