முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
8. நன்னெறி
இல்லானுக் கன்பிங் கிடம்பொரு ளேவன்மற்
றெல்லா மிருந்துமவற் கென்செய்யும் நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநூ றெரியும்
விழியிலார்க் கேது விளக்கு.
(15)
தம்மையுந் தங்க டலைமையையும் பார்த்துயர்ந்தோர்
தம்மை மதியார் தமையடைந்தோர்-தம்மின்
இழியினுஞ் செல்வ ரிடர்தீர்ப்ப ரல்கு
கழியினஞ்செல் லாதோ கடல்.
(16)
ஆக்கு மறிவா னலது பிறப்பினான்
மீக்கொ ளுயர்விழிவு வேண்டற்க-நீக்கு
பவரா ரரவின் பருமணிகண் டென்றுங்
கவரார் கடலின் கடு.
(22)
பகர்ச்சி மடவார் பயிலநோன் பாற்றல்
திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம்-நெகிழ்ச்சி
பெறும்பூரிக் கின்றமுலைப் பேதாய் பலகால்
எறும்பூரக் கற்குழியு மே.
(23)
உண்டு குணமிங் கொருவர்க் கெனினுங்கீழ்
கொண்டு புகல்வதவர் குற்றமே-வண்டுமலர்ச்
சேக்கை விரும்புஞ் செழும்பொழில்வாய் வேம்பன்றோ
காக்கை விரும்புங் கனி.
(24)
கல்லா வறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த
நல்லார் தமதுகன நண்ணாரே-வில்லார்
கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம்
புணையிற் புகமொண் பொருள்.
(25)
உடலின் சிறுமைகண் டொண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார்-மடவரால்
கண்ணளவாய் நின்றதோ காணுங் கதிரொளிதான்
விண்ணளவா யிற்றோ விளம்பு.
(26)
கைம்மா றுகவாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
தம்மா லியலுதவி தாஞ்செய்வர்-அம்மா
முளைக்கு மெயிறு முதிர்சவைநா விற்கு
விளைக்கும் வலியனதா மென்று,
(27)

15. இல்லான்-வறுமையுடையவன். மொழியிலார்-ஊமைகள். முது-பழைய. 16. தலைமை-பெருமை. இழியினும்-கீழானவர்களாக இருந்தாலும். அல்குகழி-சிறிய உப்பங் கழிநிலம். 22. ஆக்கும்-கல்வியால் உண்டாக்கும். மீக்கொண்ட-மேன்மையாகக் கொள்ளுகிற. அரவின்பருமணி-பாம்பின் சிறந்த மணி. கடு-நஞ்சு. 23. பகர்ச்சி-உரையாடல். பயில-பழக. நெஞ்சத்திட்பம்-மனத்திண்மை. நெகிழ்ச்சி பெறும்-தளர்ச்சியை அடையும். 24. குணம்-நல்லகுணம். கீழ்-கீழ்மக்கள். 25. கயவர்-கீழ்மக்கள். கனநண்ணார்-பெருமையை அடையமாட்டார்கள். வில்லார்கணை-வில்லிற்பூட்டுகிற அம்பு. நொய்து-கனமில்லாதது. 26. ஒண்புலவர்-பேரறிவு பொருந்திய புலவர்கள். மடவரல்-இளம்பெண். 27. உகவாமல்-விரும்பாமல். எயிறு-பல். வலியன-கடினமான உணவுப் பொருள்கள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்