முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
பெருநயப்புரைத்தல்
கடக்கும் பவத்தர் திருவெங்கை வாணர் கனகவெற்பிற்
குடக்கங் குமமுலை யாண்மாட் டலாமற் குலவளிகாள்
நடக்குங் கமலமு நோக்குங் குவளையு நாணிலவை
அடக்குங் குமுதமுங் கண்டதுண் டோவுங்க ளாவியிலே,
(24)
தெய்வத்திறம்பேசல்
நதிவசத் தாய சடையார் திருவெங்கை நாட்டொருவர்
மதிவசத் தாலன்றி வான்கூன் மதிநுதல் வல்லிசதா
கதிவசத் தால்வரும் வள்ளிதழ்ப் போதின் கடிமணம்போல்
விதிவசத் தால்வரு நங்கேண்மை யாவர் விலக்குவரே.
(25)
பிரியேனென்றல்
பாவிடை வைத்த பெரும்புகழ் வெங்கைப் பழமலைகைம்
மாவிடை வைத்த விகல்வாள் விழியெழின் மாதர்தமை
நாவிடை வைத்தவன் மார்பிடை வைத்தவ னாணவகப்
பூவிடை வைத்த நினையோ பிரிகுவன் பூங்கொடியே.
(26)
பிரித்துவருகென்றல்
உழைதொட்ட வங்கையர் வெங்கையர் ஞான வொளியர்வெற்பில்
இழைதொட்டு விம்மி மலையோ டிகலு மிளமுலையாய்
மழைதொட்டு நின்றவிப் பூம்பொழிற் புக்கு மணிமகரக்
குழைதொட்டு மீளுநின் கண்போல் விரைந்து குறுகுவனே.
(27)

24. கடக்கும் பவத்தர்-பிறவியைக் கடந்தவர். நடக்குங் கமலம்-நடக்கின்ற தாமரை மலரைப் போன்ற காலடி. நோக்குங்குவளை-கண். நிலவு-ஈண்டு முறுவலொளி. ஆவி-தடாகம். 25. சதாகதி வசத்தால் வரும்-காற்றின் வசப்பட்டு வருகின்ற. வள் இதழ்-வளவிய இதழ். 26. பாவிடை வைத்த-பாக்களிலே அமைத்து வைக்கப்பட்ட. கைமா-கையிலுள்ள மான். அகப்பூ-மனமாகிய மலர். 27. இழைதொட்டு-அணிகலன்கள் அணியப்பெற்று. விம்மி-பெருத்து. இகலும்-மாறுபடும். மழை தொட்டு நின்ற-முகில்கள் தவழுகின்ற. குழை-காதணி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்