முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
இடந்தலைப்பாடு
தந்ததெய்வந்தருமெனச்சேறல்
மின்றந்த வேணியர் வெங்கைபு ரேசர் மிகுமருளால்
அன்றந்த வாரி நடுவே யொருவ னகற்றியிட்ட
பொன்றந்த தெய்வமன் றோமலர் மாவைப் பொழிலிடத்தின்
முன்றந்த தின்றுந் தருநெஞ்ச மேசெலின் முந்துறவே .
(37)
முந்துறக்காண்டல்
அங்கஞ் சுமந்த திருமார் புடைவெங்கை யானருளால்
வங்கஞ் சுமந்த கடற்பிற வாமல் வருமமுதஞ்
சிங்கஞ் சுமந்த கரியுட னேயொண் செழுந்தரளச்
சங்கஞ் சுமந்தசெந் தாமரை தோன்றத் தனிவந்ததே.
(38)
முயங்கல்
மடலு மணமு மெனவே நிறைவெங்கை வாணர்தமைத்
தொடலு மடியர் பெறும்பே றெனவிவ டோண்மருவி
உடலு முயிரு மனமுமெ லாம்வளர்ந் தோங்குமின்பக்
கடலு ளழுந்தி யவசமுற் றேதையுங் கண்டிலமே.
(39)
புகழ்தல்
நாங்குழை யாம லருள்வோன் றிருவெங்கை நாயகன்கைத்
தாங்குழை யேயன்றி மென்முலை தாக்கித் தளருமிடைப்
பூங்குழை யாயெப் படிகுதித் தாலுமிப் புல்லறிவாய்
நீங்குழை யோநின் மதர்வே னெடுங்க ணிகர்ப்பதுவே.
(40)

37. மின்தந்த-மின்னலைப் போன்ற; மலர் மாவை-தாமரை மலரில் இருக்கின்ற திருமகளைப் போன்றவளை. ஏலேலசிங்கர் எறிந்து விட்ட பொன்னுருண்டை மீண்டுங் கரைக்குவந்த செய்தி இப்பாட்டிற் குறிப்பிடப்பட்டது. 38. அங்கம்-எலும்பு. வங்கம்-மரக்கலம். சிங்கம்-சிங்கத்தைப்போன்ற இடை. கரி-யானையைப் போன்ற கொங்கை. தரளச் சங்கம்-முத்துக்களையுடைய கழுத்து. செந்தாமரை-செந்தாமரை மலரைப்போன்ற முகம். 39. மடல்-பூவிதழ். அவசமுற்று-பரவசப்பட்டு. நெஞ்சு-முன்னிலையெச்சம். ஏ-வியப்பிடைச் சொல். 40. குழைதல்-பிறவித் துன்பத்தால் வருந்துதல். உழையேயன்றி-மானேயல்லாமல். நீங்கு உழையோ-ஓடிப்போகின்ற மானோ. மதர்-மதர்த்த.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்