முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
தலைவனுற்றதுரைத்தல்
மலைவன் பணியரி வின்னாண் கணைசெய்து வந்துவெங்கைத்
தலைவன் புரமிரண் டொன்றே வெலவிச் சகமனைத்துஞ்
சிலைவன் குணங்கணை வேழஞ் சுரும்பலர் செய்துவென்றோன்
முலைவன் கிரியுற வந்தநண் பாவொரு மொய்குழலே.
(44)
கற்றறிபாங்கன்கழறல்
போதைப் பொதிந்திட் டிருடூங் களகப் பொருப்பிமைய
மாதைக் கலந்த திருவெங்கை வாணர் மதுரைச்சங்க
மேதைப் பசுந்தமிழ்ப் பாற்கட னீந்திய வீரமொரு
பேதைக் குடைந்துநின் றாய்தகு மோசொல் பெருந்தகையே.
(45)
கிழவோன்கழற்றெதிர்மறுத்தல்
ஊணா மெனநஞ் சுவந்தோன் றிருவெங்கை யூரிலுயர்
சேணா முலகம் வறிதாக வந்தவச் சேயிழையார்
பூணார மென்முலை யின்பெருங் காட்சியும் பொய்யிடையின்
காணாமை யுங்கண் டனையாயி னண்ப கழறலையே.
(46)
கிழவோற்பழித்தல்
அண்டா திபர்நந் திருவெங்கை நாயகர்க் கன்றியொரு
பெண்டா லிதய முருகினை யாயிற் பெருந்தகைநீ
விண்டா ரகைகண் டினியிந்து காந்தமு மெய்யுருகும்
வண்டா மரைகளு மின்மினி தோன்ற மலர்ந்திடுமே.
(47)

44. மலை-மேருமலை. வன்பணி-வலிய பாம்பு. அரி-திருமால். இரண்டொன்று-மூன்று. வன்குணம்-வலியநாண். மலை பணி அரி வில் நாண்கணை என்பனவும் சிலை குணம் கணை வேழம் சுரும்பு அலர் என்பனவும் நிரனிறை. வந்தணண்பா என்னும் பாடத்திற்கு மொய்குழல் வந்தனள் என்க ; வந்தனள் எனற்பாலது ஈண்டு அன் சாரியை தொக்கு நின்றதென்க. 45. போதை பொதிந்திட்டு-மலரைச் சூடி. மேதை-அறிவு பொருந்திய. உடைதல்-தோற்றல். 46. சேண் ஆம் உலகம்-விண்ணுலகம். சேயிழையார்-மாதரார். பொய்யிடை-நுண்ணிடை. 47. அண்டாதிபர்-தேவ நாயகராகிய சிவபெருமான். பெண்டால்-பெண்ணால். இந்து காந்தம்-சந்திரகாந்தக்கல். தாரகை-விண்மீன்கள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்