| 9. திருவெங்கைக்கோவை |
|
| கிழவோன்வேட்கைதாங்கற்கருமைசாற்றல் |
| |
| |
பாலார் மொழியுமை பங்காளர் வெங்கையம் பாவைதந்த மாலாழ் தருமெனை வெவ்வுரை யானண்ப வாட்டுகின்றாய் காலாழ் களரி னமிழ்ந்தவெங் கோட்டுக் களிற்றையொரு வேலா லெறிபவர் போலே யிதுவென் விதிவசமே.
|
(48) |
| |
| பாங்கன்றன்மனத்தழுங்கல் |
| |
| |
பெட்டுப்பட் டாவுரி கொண்டோன்றென் வெங்கைப் பிரான்வரையின் மட்டுப்பட் டாவி மலர்வா ரிசமுக வல்லிமுகை ஒட்டுப்பட் டானை யனையா னிடையெனு மோரிழையாற் கட்டுப்பட் டானினி யென்செய்கு வேனிந்தக் காசினிக்கே.
|
(49) |
| |
| தலைவனோடழுங்கல் |
| |
| |
நாட்டு மலிபுகழ்ப் பெம்மான் றிருவெங்கை நாட்டிறைவ கோட்டு வரிவிற் கொலைவேடர் தந்த கொடியிடையாள் பூட்டு மயற்றொடர் நீயே படினெவர் போக்குறுவார் காட்டு மிரவிக் கிரவியுண் டோவிருள் காய்வதற்கே.
|
(50) |
| |
| எவ்விடத்தெவ்வியற்றென்றல் |
| |
| |
தழைந்தார் மலிசடை யீசர்தம் மாதின் றடமுலைக்குக் குழைந்தார் திருவெங்கை நாயக னாரிடங் கொண்டுதனி விழைந்தார் நினதகத் திற்றிட்டி வாயிடை வேழமொடு நுழைந்தா ரிடமிய லெல்லா மிறைவ நுவன்றருளே.
|
(51) |
| |
|
| |
48. பாவை-பாவை போல்வாளாகிய தலைமகள். மால்ஆழ் தரும்-மயக்கத்தில் ஆழுகின்ற. வெவ்வுரை-கடுஞ்சொல். கோடு-கொம்பு. களிறு-ஆண்யானை. 49. பெட்டு-விரும்பி. பட்டுஆ-பட்டாடையாக. உரி-யானைத் தோலை. மட்டுப்பட்டு-தேன்பொருந்தி. முட்டுப்பட்டு-தடைப்பட்டு. ஆனை அனையான்-யானையைப் போன்றவன். 50. கோட்டு-வளைக்கப்பட்ட. பூட்டு-பூட்டிவிட்ட. மயல்தொடர்-மையல் விலங்கில். இரவிக்கு இரவி-கதிரவனுக்கு வேறொரு கதிரவன். 51. தழைந்த-செழித்த. மாது-உமாதேவி. குழைந்தார்-நெகிழ்ந்தார். திட்டிவாய்-கண்ணாகிய வழி. நுவலல்-சொல்லல்.
|
|
|
|