முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
அவனஃதிவ்விடத்திவ்வியற்றென்றல்
நறையே யிதழி புனைவார் திருவெங்கை நாதர்சடைப்
பிறையே நுதலவர் மானே கருங்கண் பிடித்ததுடிப்
பறையே யிடையணி பாம்பே யகலல்குல் பற்றுமலை
இறையே முலைமலர்த் தண்டலை யேயிட மென்னுயிர்க்கே.
(52)
பாங்கனிறைவனைத்தேற்றல்
தடங்கொண்ட கண்ணி யிடத்தார் திருவெங்கைத் தண்டலையை
இடங்கொண்டு காமப் புனனீந்தி நீகரை யேறுதற்குக்
குடங்கொண்டு நின்ற வொருமாதைக் கண்டு குறுகுமட்டுந்
திடங்கொண்டு நெஞ்சந் தளராது நிற்றி திறலவனே.
(53)
குறிவழிச்சேறல்
காவியு மாம்பலும் பூத்தசெந் தாமரை கண்டளிகள்
வாவியு மோடையும் விட்டெய்த வேபொழில் வாய்நிற்குமோ
தேவியு மானும் விளையா டிடத்தர் திருவெங்கையில்
ஆவியு மாரமு தும்போன் றிறைகண்ட வாயிழையே.
(54)
இறைவியைக்காண்டல்
முகையே முலைசெழும் போதே முகமலர் மூசுவண்டின்
தொகையே குழல்செந் தளிரே யடிநற் சுவைக்கனியே
நகையே யிதழ்திரு வெங்கைபு ரேசர்கைந் நவ்விமிகும்
பகையே யெனுங்க ணிவரே யிறைசொன்ன பைங்கொடியே.
(55)
இகழ்ந்ததற்கிரங்கல்
புடையே யுமையொடுஞ் செங்கதிர் வேற்கைப் புதல்வனொடும்
விடையே யிவர்தரும் பெம்மான் றிருவெங்கை வெற்பிலன்னப்
பெடையே யெனவந் திளங்கா வுறுமிப் பெருந்தனத்தார்
இடையே யிலையெனி னைந்திளை யான்கொ லிறையவனே.
(56)

52. நறைஏய்-தேன் பொருந்திய. இதழி-கொன்றை. புனைவார்-அணிவார். துடிப்பறை-உடுக்கை. மலைஇறை-மேருமலை. தண்டலை-குளிர்ச்சியாகிய இடம். 53. திறலவன்-ஆற்றல்மிக்கவன். தடம்கொண்ட-அகற்சியைக் கொண்ட. குடம்-கும்பம்; அஃது ஈண்டுக் கொங்கையை உணர்த்திற்று. 54. காவி-கருங்குவளை. ஆம்பல்-செவ்வல்லி. அளிகள்-வண்டுகள். ஆம்பல் என்றது வாயை. இறை-பண்பாகு பெயர். 55. குழல்-கூந்தல். முகை-மொட்டு. நவ்வி-மான். கணிவர்-கண்இவர்-கண்களையுடைய இவர். 56. புடை-பக்கம். விடை-காளை. பெருந்தனத்தார்-பெரிய கொங்கைகளையுடையவர் ; பெருஞ்செல்வர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்