முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
தலைவனைவியத்தல்
சூடும் பிறையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
பாடுங் கவியு ளடங்காக் கவினுடைப் பாவையன்னார்
கூடுங் குவிமுலைக் குன்றுங்கண் வேலையுங் கூந்தனெடுங்
காடுங் கடந்துவந் தான்மிக வீரனங் காவலனே.
(57)
தலைவியைவியத்தல்
பருத்த குவிமுலைப் பாரத்தி னாற்கடற் பங்கயத்தில்
இருத்த லரிதென வந்துவன் பூவி லிருக்குமிவர்
விருத்த கிரிமகிழ் வெங்கைவெற் போன்மயல் வெள்ளங்கொண்ட
வருத்த விதய மலர்மீ திருந்திட வல்லவரே.
(58)
தலைவன்றனக்குத்தலைவிநிலைகூறல்
இயலாற் சிறந்த திருவெங்கை வாண ரிமையவெற்ப
மயலாற் புரிந்த முலையானை யின்முன் மதர்மழைக்கட்
கயலாற் கலக்குவித் துன்கலை வேலையைக் காரளகப்
புயலாற் பருகுவித் தார்நின்று ளார்தண் பொழிலிடத்தே.
(59)
தலைவன்சேறல்
ஏழா முலகும் புகழ்வெங்கை வாண ரிமையவெற்பில்
ஆழா தெனைநெடுங் காமக் கடனின் றணைத்தெடுப்பார்
தாழா திசையளி மூசுமென் பூந்துணர்த் தண்கொம்பரே
சூழாய மாக நடுநிற்ப ரோவிந்தச் சோலையிலே.
(60)
தலைவியைக்காண்டல்
தளைப்பாச நாசகர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பிற்
களைப்பான் மதிமுகக் காரிகை யீர்தண் களபமுலைக்
கிளைப்பார மென்பெருந் தோண்மே லிருத்திநை கின்றவிடை
இளைப்பாற வோதனி நின்றீரிக் காம ரிளம்பொழிற்கே.
(61)

57. கூடும்-ஒன்றோடொன்று நெருங்கிய. நந்தலைவன் மலையையுங் கடலையுங் காட்டையுங் கடந்து வந்தான் என்னும் நயங்காண்க. 58. கடல் பங்கயத்தில்-கடலில் தோன்றிய தாமரைப் பூவில். வன் பூவில்-வலிய நிலத்தில். 59. இயலால்-எல்லா இலக்கணங்களாலும். கலைவேலை-கலைக்கடல். கயல்-சேல்மீன். புயல்-முகில். பருகுவித்தல்-குடிப்பித்தல். 60. ஏழாம் உலகும்-ஏழுலகங்களும். பூந்துணர்-பூங்கொத்துக்கள். 61. களை-அழகுள்ள. காரிகையீர்-அழகையுடையவரே! காமர்-அழகிய.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்