முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
நூல்
அண்ணன்மா புகழ்மூ வரும்புனை யரும்பா
      வன்றியென் கவியுநின் றனக்காம்
பண்ணுலா மிருவ ரிசைகொணின் செவியிற்
      பாணிமா னொலியுமேற் றிலையோ
விண்ணுலா முடியின் மேருவின் வடபால்
      வெயிலொரு புடையுற வொருபால்
தண்ணிலா வெறிப்ப வளர்ந்தெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(1)

1. கம்பளன் அசுவதரனென்னும் இரு கந்தருவர்கள் ஒரு ஞான்று பெரிதும் புகழ்ந்து பாடியவழிச் சிவபெருமான் திருவுளமுவந்து பணித்தவாறே என்றும் காதணி வடிவமாயமர்ந்து பாடும் பெருவாழ்வு பெற்றன ரென்பது வரலாறாதலின் இருவரென்பது அக்கந்தருவர்களை அன்றித் தும்புரு, நாரதரெனலும் ஒன்று. வடபாலுள்ள மேருவைப்போலத் தென்பாலில் வளர்ந்தெழுமென்றது, சூரிய சந்திரர்கள் இச்சோணசைலத்தைத் தாண்ட இயலாமையின் பக்கங்களிற் சூழ்ந்து சேறலானும், ஆதியந்தமறியப்படாமையானும், செந்நிறமுடைமையாலும் என்க. அண்ணன்மா புகழ்-பெருமை பொருந்திய சிறந்த புகழ். மூவரும்என்றது அப்பர், சுந்தரர், சம்பந்தர் என்போரை. பண்-இசை. பாணி-கை. பால்-பக்கம்- “என்கவியு நின்றனக்காம்” எனவே அவையடக்கமுங் கூறினாராயிற்று. பாணிமான் ஒலி என்பதற்குச் சடையிலுள்ள கங்கை நீரின் ஒலி என்று பொருள் கோடலும் ஒன்று.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்