முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
துவக்கற வறிந்து பிறக்குமா ரூருந்
      துயர்ந்திடா தடைந்துகாண் மன்றும்
உவப்புட னிலைத்து மரிக்குமோர் பதியு
      மொக்குமோ நினைக்குநின் னகரைப்
பவக்கடல் கடந்து முத்தியங் கரையிற்
      படர்பவர் திகைப்பற நோக்கித்
தவக்கல நடத்த வுயர்ந்தெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(2)
நீங்கருந் துயர்செய் வளிமுதன் மூன்ற
      னிலையுளே னவைதுரந் திடுமுன்
வாங்கிநின் றனிவீட் டுறைகுவான் விரும்பி
      வந்தன னின்குறிப் பறியேன்
ஆங்குறை மதியே தாங்கியென் றுலக
      மறைகுறை யறநிறை மதியுந்
தாங்கிய முடியோ டோங்கிய சோண
      சைலனே கைலைநா யகனே.
(3)
கனிமலை துவர்வாய்க் கோதையர்க் குருகுங்
      கன்மனக் கொடியனுக் கென்னீ
துனிமலை பிறவி தவிர்த்தனை யெனநிற்
      சுளிபவ ரிலையெனக் கிரங்காய்
பனிமலை கதிர்வந் துறநிலை யாடி
      பயின்றபீ டிகையென வுதயத்
தனிமலை யிருப்ப வளர்ந்தெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(4)

2. துவக்கு-பாசப் பிணிப்பு. மன்றும் பதியும் என்பன தில்லையையும் காசியையும் உணர்த்தி நின்றன. நினைக்கு நின்னகரை-நினைத்த அளவில் முத்தியைக் கொடுக்கும் நினது பதியை. (திருவண்ணாமலை) திகைப்பு-நெறிபிறழ்தலாலுண்டாகும் கலக்கம்; அது நிகழாவாறு மரக்கலமூர்வோர் கரைக்கணுள்ளதொரு குறியினை நோக்கிச் சேறல்போல முத்தியங்கரையிற் படர்பவர் இச் சோணசைலத்தை நோக்கிச் செல்லா நிற்பரென்பது. நோக்கல்-பார்த்தல், தியானித்தல். தவம்-சரியை, கிரியை, யோகம், ஞானம். மரிக்கும்-இறக்கும். பவக்கடல்-பிறவிக்கடல். படர்பவர்-செல்லுகிறவர். 3. வாதபித்த கோழைகளினிடமாகிய உடலில் ஒதுக்கிருந்த யான் அவை என்னை யோட்டுமுன் உமது தனி வீட்டை உரிமையுறப் பெற்று அதில் உறைகுவான் வந்தனனென்பது. வீடு-மோட்சம் தாங்கி-பெயர். உம்மை இறந்தது தழீஇயது. அறை குறையற-சொல்லப்படுகின்ற குறைவு நீங்க. வளி-வாதம். துரந்திடும்-விரட்டும் நிறைமதியைத் தாங்குதல் முழுத்திங்கள் நாளில் என்க. 4. கனி மலை துவர்வாய்-கொவ்வைக் கனியைப் பொரும் செவ்வாய். துனி மலை பிறவி-துன்பத்தால் வருத்தும் பிறவி. பனி மலை கதிர்-பனியைக் கெடுக்குஞ் சூரியன். இச்சோணசைலப் பிரானுக்கு எதிரில் நிறுவிய நிலைக்கண்ணாடிப் பீடம்போல் கின்றது. சூரியனுறுங்கால் உதயகிரி என்றவாறு என்-என்ன காரணத்தால்? சுளிபவர்-சினப்பவர். அரவகல் அல்குலார்பால் ஆசை நீத்தவர்கட்கே வீடாகவும் உருகுங் கொடியனுக்கு ஏன்பிறவி தவிர்த்தனை என்று சுளிபவர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்