முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
இறைமகளாடிட நோக்கியழுங்கல்
நீடுந் தினையிற் கிளிநோக் குதலென நின்றுநம்மோ
டாடுந் தலைவர் வரனோக் கிதணு மவருடனே
கூடுந் தொழின்மறைக் குஞ்சுனை யோடலர் கொய்யுமலர்க்
காடும் பிரிவுறச் செய்வதென் னோவெங்கைக் கண்ணுதலே.
(161)
பாங்கியாடிடம் விடுத்துக்கொண்டகறல்
வயிரோ சனனுக் குலகீந் தவர்வெங்கை மன்னனுக்குப்
பயிரோ டுறவற நீத்தாளென் றெண்ணிப் பழுதுரையல்
செயிரோ சிறிது மிலாக்கிளி காடன் சிறுகுடிலுக்
குயிரோ டரிவை நடந்துசென் றாளென் றுரைமின்களே.
(162)
பின்னாணெடுந்தகை குறிவயினீடுசென்றிரங்கல்
தன்னோ டிருந்த பொழுதிளஞ் சோலைசெய் தன்மைகண்டேற்
கன்னோ தனியிருந் தாற்செய்யு மாறு மறிவிக்கவோ
மின்னோ வெனநின் றவிர்சடை யார்திரு வெங்கைவெற்பில்
என்னோ வறிந்தருள் செய்வான் வராம லிருந்ததுவே.
(163)
வறுங்கள நாடிமறுகல்
பெறுங்கள நஞ்ச முடையா ரடியவர் பிள்ளைதனை
அறுங்கள மென்னு மொருவெங்கை வாண ரணிவரைமேல்
நறுங்கள வன்ன குழனீங்க மங்கல நாணிழந்த
வறுங்கள மென்ன விருந்ததந் தோவிம் மணியிதணே.
(164)

161. தினையில்-தினைப்புனத்தில். என்னோவென்னுமோகாரம் இரங்கல். 162. வயிரோசனன்-மகாபலி. இவன் விரோசனன் என்பவனுடைய மகனாகையால் வயிரோசனன் எனப்பட்டான். செயிர்-குற்றம். 163. தன்னோடு-தலைவியோடு. இளஞ்சோலை செய்தன்மை-இன்பம். தனியிருந்தாற் செய்யுமாறு-துன்பம். என்னோ: இரங்கற் குறிப்பு; வியப்பீடைச் சொல்லுமாம். 164. களம்-கழுத்து. அடியவர் என்றது சிறுத்தொண்டரை. பிள்ளையென்றது. சீராளனை. வறுங்களம்-வெறுங்கழுத்து. தலைவியிருந்தபோது மங்கலமாகக் காணப்பட்டது பின் தலைவி சென்றபிறகு அமங்கலமாகக் காணப்பட்டதென்பது கருத்து.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்